பேருந்து முனையங்களில் உருவாகி இருந்த கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமங்கள் அனைத்தும் முடிவுற்றதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று முன்தினம் இரவு தெரிவித்தது.
எட்டு பேருந்து முனையங்களில் கொவிட்-19 குழுமங்கள் உருவாகின. ஒவ்வொன்றும் முடிவுற்ற நிலையில் இறுதியாக இம்மாதம் 15ஆம் தேதியன்று தெம்பனிஸ் பேருந்து நிலையத்தின் கிருமிக் குழுமம் முடிவுற்றதாகக் கூறப்பட்டது.
முதன்முதலில் பீஷான், செங்காங் பேருந்து முனையங்களில் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று கிருமித்தொற்றுக் குழுமங்கள் உறுதிசெய்யப்பட்டன.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் 537க்கு அதிகரித்தது. எட்டு முனையங்கள் பாதிக்கப்பட்டதால் ஒரு சில பேருந்துகளுக்காக பயணிகள் கூடுதல் நேரம் காத்திருக்க நேரிடும் என்று செப்டம்பர் 10ஆம் தேதியன்று ஆணையம் தெரிவித்தது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் அல்லது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் நிலைக்கு ஆளானோர் எனச் சில நூறு ஓட்டுநர்களால் தங்கள் பணியில் ஈடுபட முடியாததே இந்தக் கூடுதல் காத்திருப்பு நேரத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே இம்மாதம் 16ஆம் தேதி நிலவரப்படி, பொதுப் போக்குவரத்துத் துறையின் முன்களப் பணியாளர்களில் 99 விழுக்காட்டினருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வெவ்வேறு பேருந்து முனையங்களைச் சேர்ந்த 49 ஓட்டுநர்கள், இன்னமும் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வருகின்றனர் என்று கூறப்பட்டது.
அவர்களில் தெம்பனிஸ் பேருந்து முனையத்தைச் சேர்ந்தவர்கள் 14 பேர்.
இந்நிலையில், பெரும்பாலான பேருந்துச் சேவைகளுக்குரிய காத்திருப்பு நேரம் அதே நிலையில் உள்ளது என்றும் இதனால் பயணிகளுக்குக் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏதுமில்லை என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார்.
வேலையிடச் சூழலால் கிருமிப் பரவல் ஏற்பட்டு இத்தொற்றுக் குழுமங்கள் உருவாகி இருக்கலாம் என்று சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் கடந்த மாதம் கூறியிருந்தார்.
அதையடுத்து கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை ஆணையம் நடைமுறைப்படுத்தியது.