சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகள், குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளன. கொவிட்-19 நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கென மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் படுக்கைகளில் கிட்டத்தட்ட 90% தற்போது நிரப்பப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவுப் (ஐசியு) படுக்கைகளில் மூன்றில் இரண்டு படுக்கைகள் நிரப்பப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களாக சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகமாகப் பதிவாகிவரும் நிலையில், அழுத்தநிலைக்கு சிங்கப்பூர் மருத்துவமனைகள் தள்ளப்பட்டுள்ளன என்று கொவிட்-19க்கு எதிராக அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழு நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
தற்போது கொவிட்-19 நோயாளிகளுக்கென 207 'ஐசியு' படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படுக்கைப் பிரிவில் சுவாசிக்கச் சிரமப்படும் 71 நோயாளிகளுக்குத் தேவையான கருவி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 75 நோயாளிகளுக்கு சுவாசிக்க உதவும் கருவி பொருத்தப்படாத நிலையிலும், அணுக்கமான கண்காணிப்பும் சிகிச்சையும் தேவைப்படுவதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
"மேலும் அதிக புதிய படுக்கைகளை நாங்கள் சேர்க்கலாம். ஆனால் அதற்குச் செலவாகும்," என்றார் அவர். மற்ற சிகிச்சைகளை மேற்கொள்ளத் தாமதமாகும் என்று திரு ஓங் விளக்கினார்.
கொவிட்-19 நோயாளிகளுக்காக 300 'ஐசியு' படுக்கைகளை ஒதுக்குவதே அடுத்த கட்டத் திட்டம் என்று அவர் கூறினார்.
அதிகரிக்கும் கிருமித்தொற்றுச் சம்பவங்களைச் சமாளிப்பதற்காக பொது, சமூக, தனியார் மருத்துவமனைகளுடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்பட்டு கூடுதல் படுக்கைகளை கொவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
மருத்துவமனைகளிலும் கொவிட்-19 சிகிச்சை வளாகங்களிலும் (சிடிஎஃப்) தற்போது 4,200 படுக்கைகளை அமைச்சு நிர்வகித்து வருகிறது.
தங்கள் மீதான பளுவைக் குறைக்கும் நோக்கில் சற்று உடல்நிலை தேறிய நோயாளிகளைக் கூடுதல் கண்காணிப்புக்குச் சமூக சிகிச்சை வளாகங்களிடம் மருத்துவமனையின் மருத்துவக் குழுக்கள் பரிந்துரைக்கின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களுக்கு கொவிட்-19 ஏற்படுவது குறைந்துள்ளது
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட முதியவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படுவது குறைந்து வருவதாகக் கூறப்பட்டது.
இம்மாதத் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 1,000 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்றார் திரு ஓங். நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுக்கொண்ட 279 முதியவர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இந்தச் சரிவுக்குப் பல காரணங்கள் உண்டு என்று குறிப்பிட்ட அமைச்சர் ஓங், அதில் முக்கியமானது கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி என்றார். தகுதிபெறும் 600,000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களது 'பூஸ்டர்' தடுப்பூசியைப் போட்டுக்கொண்டதாகவும் அத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காக மேலும் 96,000 பேர் பதிந்துகொண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது.
தங்களின் சமூக ஒன்றுகூடல்களைக் குறைத்துக்கொண்டு அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே முதியவர்கள் செல்கின்றனர் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.
இருப்பினும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நிலையில் தொடர்ந்து அதிகளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்ற செய்தியை அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.
'ஐசியு' நோயாளிகள், கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்கள் ஆகியவர்களில் மூன்றில் இருவராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மூத்தோர் உள்ளனர் என்றார் அவர்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு அட்டவணை அடிப்படையில் விடுப்பு தரப்படும்
பொதுச் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களை, இவ்வாண்டு இறுதியில் அட்டவணைப்படுத்தி விடுப்பில் போகவிடுமாறு அந்தந்தச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.
சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் மீதுள்ள அழுத்தத்தைத் தணிப்பது அவசியமாகியுள்ளதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
கடந்த 20 மாதங்களாக அழுத்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இப்பணியாளர்களில் பலர், விடுப்பின்றி வேலை செய்வதாக அவர் தெரிவித்தார்.
"வேலைப் பளு அதிகம். அத்துடன் ஒவ்வொரு சுகாதாரப் பராமரிப்புப் பணியாளரின் பொறுப்பும் முக்கியம். ஆனால் அவர்களின் நலனை நாம் காப்பதும் அவசியம்" என்றார் திரு ஓங்.
'பிசிஆர்' பரிசோதனைகளைக் குறைத்துக்கொள்வதால் அப்பரிசோதனையை மேற்கொண்டு வரும் பணியாளர்களைச் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவில் உதவிக்கு நியமிக்கலாம் என்ற திட்டத்தை அவர் முன்வைத்தார்.