கி.ஜனார்த்தனன்
வரும் ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் தீமிதித் திருவிழாவில் 950 பக்தர்கள் பூக்குழியில் இறங்கு வதற்குப் பதிவு செய்திருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவல் சூழல் தொடர்பிலான கட்டுப்பாடு
களால் இவ்வாண்டு அனுமதிக்கப் படும் பக்தர்களின் எண்ணிக்கை, அண்மைய வரலாற்றில் ஆகக் குறைவு.
கடந்த ஆண்டின்போது பொதுமக்களின் பங்கேற்பு இன்றி நடந்த தீமிதித் திருவிழாவில் சமயச் சடங்குகளில் பங்கேற்க நியமிக்கப்பட்ட ஆலயத் தொண்டூழியர்கள் மட்டுமே தீமிதிக்க அனுமதிக்கப்பட்டனர்.
2019ஆம் ஆண்டில் கொவிட்-19க்கு முந்திய சூழலில் பூக்குழியைக் கடக்கும் நிகழ்வில் 4,100 ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு தீமிதித் திரு
விழாவில் 300 பெண்கள் பூக்குழியை வலம் வர பதிவு செய்துள்ளனர். அத்துடன் 2,000 பக்தர்கள் பால்குடம் செலுத்தியுள்ளனர்.
மேலும் கும்பிடுதண்டம் நேர்த்திக்கடனுக்காக 1,600 பெண் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாகவும் அங்கபிரதட்சணம் நேர்த்திக்கடனுக்காக 600 ஆண்கள் பதிவு செய்துள்ளதாகவும் வாரியம் நேற்று தமிழ் முரசிடம் தெரிவித்தது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் ஆலோசனையின் பேரில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்திருப்பதாக இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
ஆயினும், கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கை குறித்து பக்தர் சிலரின் அதிருப்தியைப் புரிந்துகொள்ள முடிவதாக வாரியம் தெரிவித்தது.
ஆயினும், இச்சூழலில் தீமிதித் திருவிழா தொடர்வதற்கான ஆகச் சிறந்த முறை இதுதான் என்றும் வாரியம் கூறியது.
கலந்துகொள்ளும் பக்தர்கள் நிச்சயம் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.
"முகக்கவசங்கள் இல்லாமல் விழாவை நடத்த நாங்கள் முற்பட்டிருந்தால் நமக்கு அனுமதிக்கப்படும் எண்ணிக்கை இதைவிடக் குறைவாக இருந்திருக்கும்," என்று இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி த. ராஜசேகர் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
முன்பதிவின்றி ஆலயத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்று வலியுறுத்த விரும்பும் வாரியம், தீமிதித் திருநாள் அன்று வழக்கமான ஆலயத் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறியது.
முன்னதாகப் பதிவு செய்த பங்கேற்பாளர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
இவ்வாறு வரும் பங்கேற்பாளர்கள், தங்களுக்குரிய 'கியூஆர்' குறியீட்டைக் காட்டவேண்டும். ஒவ்வொரு பதிவுக்கும் ஒருவர் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
வழக்கமாக ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து தொடங்கும் பக்தர்களின் பாத ஊர்வலம், இவ்வாண்டு திருவிழாவில் இல்லை.
பகோடா ஸ்திரீட்டில் பதிவு செய்த பின் பக்தர்கள் அங்கிருந்து 20 மீட்டர் மட்டுமே நடந்து ஆல யத்தை அடையவேண்டும்.
ஆலயத்தில் பார்வையாளர்
களுக்கு அனுமதி இல்லை.
தீமிதித் திருவிழாவைக் காண விரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 24ஆம் தேதி காலை 5 மணி முதல் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஃபேஸ்புக் அல்லது யூடியூப் தளங்களில் நேரலையாகக் காணலாம்.
கொவிட்-19 கட்டுப்பாட்டுகளுடன் தீமிதித் திருவிழா சிறப்பாக நடந்தேற அனைவரது ஒத்துழைப்பும் புரிந்துணர்வும் முக்கியம் என்று வாரியம் வலியுறுத்துகிறது.