அரசு நிதியுதவியுடன் இயங்கும் பள்ளிகளில் அடுத்த ஆண்டில் இருந்து சிங்கப்பூரர் அல்லாத மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் கூடுகிறது.
நிரந்தரவாசி மாணவர்களுக்கான மாதாந்திர பள்ளிக் கட்டணம் 2022-2023ஆம் ஆண்டுகளில் $25 முதல் $60 வரை உயர்த்தப்படும் என்று கல்வி அமைச்சு இன்று வியாழக்கிழமை தெரிவித்தது.
அனைத்துலக மாணவர்களுக்கான இந்தக் கட்டண உயர்வு $25 முதல் $150 வரை இருக்கும்.
அடுத்த ஈராண்டுகளின் ஜனவரி மாதத்தில் இந்த மாற்றங்கள் நடப்பிற்கு வரும்.
தொடக்கப் பள்ளி மாணவர்களைப் பொறுத்தமட்டில், நிரந்தரவாசிகளுக்கான மாதாந்திரக் கட்டணம் அடுத்த ஆண்டில் $205லிருந்து $230 ஆகவும் 2023ஆம் ஆண்டில் $255 ஆகவும் உயரும்.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்கள் எனில், இப்போது $465ஆக இருக்கும் மாதாந்திர கட்டணம் 2022ல் $490ஆகவும் 2023ல் $515ஆகவும் கூடும்.
ஆசியான் அல்லாத அனைத்துலக மாணவர்கள் அடுத்த ஆண்டில் $825ம் அதற்கு ஆண்டில் $875ம் மாதாந்திரக் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இப்போது அவர்கள் மாதத்திற்கு $775 செலுத்தி வருகின்றனர்.
உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில், நிரந்தரவாசிகளுக்கான மாதாந்திரக் கட்டணம் அடுத்த ஆண்டில் $380லிருந்து $440 ஆகவும் 2023ஆம் ஆண்டில் $500 ஆகவும் உயரும்.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்கள் எனில், இப்போது $780ஆக இருக்கும் மாதாந்திர கட்டணம் 2022ல் $840ஆகவும் 2023ல் $900ஆகவும் கூடும்.
ஆசியான் அல்லாத அனைத்துலக மாணவர்கள் அடுத்த ஆண்டில் $1,600ம் அதற்கு ஆண்டில் $1,750ம் மாதாந்திரக் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இப்போது அவர்கள் மாதத்திற்கு $1,450 செலுத்தி வருகின்றனர்.
தொடக்கக் கல்லூரிகளில் இப்போது மாதாந்திரக் கல்விக் கட்டணமாக $460 செலுத்திவரும் நிரந்தரவாசி மாணவர்கள், அடுத்த ஆண்டில் $520ம் 2023ஆம் ஆண்டில் $580ம் செலுத்த வேண்டும்.
ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்கள் எனில், அடுத்த ஈராண்டுகளில் மாதாந்திரக் கட்டணமாக முறையே $1,070ம் $1,100ம் செலுத்த வேண்டும்.
மற்ற நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக மாணவர்களுக்கான கட்டணம் அடுத்த ஆண்டில் $1,800லிருந்து $1,950ஆகவும் 2023ல் $2,100 ஆகவும் உயர்த்தப்படும்.
சிங்கப்பூரர்களுக்கான பள்ளிக் கட்டணங்களிலும் இதரக் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.