ஒவ்வொரு வீட்டுக்கும் 10 'ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை' (ஏஆர்டி) கருவிகளை சிங்போஸ்ட் வழியாக சுகாதார அமைச்சு வழங்கவிருக்கிறது. கருவிகளை விநியோகிக்கும் பணியை இன்றுமுதல் 1,000 அஞ்சல்துறை பணியாளர்கள் மேற்கொள்வர்.
பொதுமக்களுக்குப் போதுமான 'ஏஆர்டி' கருவிகள் கிடைக்க ஏதுவாக, சனிக்கிழமைகளிலும் பணியாளர்கள் அவற்றை விநியோகிக்கும் பணியில் ஈடுபடுவர்.
'ஏஆர்டி' கருவிகளை விநியோகிக்கும் பணியை மட்டுமே அவர்கள் சனிக்கிழமைகளில் மேற்கொள்வர் என்று சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கு 'எஸ்டி பயோசென்சர் ஸ்டாண்டர்ட் கியூ கொவிட்-19 ஏஜி' இல்லப் பரிசோதனைக் கருவிகள் விநியோகிக்கப்படும். இவை தென்கொரியாவிலிருந்து வரவழைக்கப்படுபவை. இக்கருவிகள் 15 நிமிடங்களில் முடிவுகளைக் காட்டிவிடும்.
பயனாளர்கள் பஞ்சு உருட்டை (Swab) ஒவ்வொரு நாசித் துவாரத்திலும் 10 முறை சுழற்றி, சளி மாதிரியைச் சேகரிக்க வேண்டும். பின் அதனைக் கொடுக்கப்பட்டுள்ள திரவத்தில் தோய்த்து, கருவியின் மீது விட்டு, தொற்று முடிவுகளைப் பெற வேண்டும்.