கிருமி நீக்கும் வாய் நீர்மத்தை
இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்
தொண்டைப்புண் ஏற்படுத்தும் கிருமிகளை நீக்கும் ஆற்றலுடைய 'ஸ்டேவெல்' வாய் நீர்மத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் தங்கள் விருப்பத்தை பதிந்துகொள்ளலாம் என்று தெமாசெக் அறநிறுவனம் நேற்று தெரிவித்தது. நோய்ப் பரவலைக் குறைக்கும் நோக்கில் அமைந்த அறநிறுவனத் திட்டத்தின் கீழ் வாய் நீர்மத்தைக் கொண்ட 250 மி.லி புட்டியும் நீர்மத்தை அளக்கும் 25 மி.லி கோப்பையும் வழங்கப்படும். பதிந்து கொள்வதற்கான காலம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை என்றும் கூறப்பட்டது.
2022ல் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தேதிகளில் மாற்றம்
வரும் 2022 ஆண்டில் நோன்புப் பெருநாள் மே 3ஆம் தேதியன்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஜூலை 10ஆம் தேதியன்றும் அனுசரிக்கப்படும். முன்னதாக அறிவிக்கப்பட்ட தேதிகளின் மறுநாள் இவை என்று முயிஸ் நேற்று தெரிவித்தது. புதிய நிபந்தனைகள் கூடிய வானியல் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று ஹஜ்ஜுப் பெருநாள் அனுசரிக்கப்படுவதால், மறுநாளான ஜூலை 11ஆம் தேதியும் பொது விடுமுறை நாளாகக் கருதப்படும் என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
தொலைவில் இருந்தவாறு மருத்துவ ஆலோசனை வழங்கும் செயலி
மருத்துவரிடம் தொடர்ந்து ஆலோசனை பெறவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், இனி மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் ஒரு செயலியைப் பயன்படுத்தித் தொலைவிலிருந்தவாறு மருத்துவரைச் சந்திக்கலாம். இத்தகைய மருத்துவ ஆலோசனை அம்சத்தைக் கொண்ட 'ஒன்என்யுஎச்எஸ்' (OneNUHS) என்ற செயலி, இங்குள்ள பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் ஒன்றுக்கு வழங்கப்படும் முதல் செயலி என்று கூறப்படுகிறது. படம்: என்யுஎச்எஸ்