பருவநிலை மாற்றத்தால் சுகாதாரம் தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், வெப்ப அலைகளுக்கும் கூடுதலான டெங்கிப் பரவல்களுக்கும் ஆளாகும் அபாயத்தில் சிங்கப்பூர் உள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
ஆறாவது 'லான்செட்' அறிக்கையின்படி, 1986ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தின் சராசரி புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் 2020ல் வெப்ப அலைக்கு ஆளாகிய 65 வயதுக்கு மேற்பட்ட ஒட்டுமொத்த முதியோர், மேலும் 3.1 பில். நாட்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த ஆய்வறிக்கைக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் உட்பட, 90க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பங்களித்துள்ளனர்.
அதிக வெப்பமான நாட்களும் நேர அளவும் கடந்த சில பத்தாண்டுகளாக உலகளவில் அதிகரித்துள்ளதாகக் கண்டறியப்பட்டது. இந்த வெப்பத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வதும் பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டது.
அதே வேளை, சிங்கப்பூரில் அரிதாக ஏற்படும் 'டென்வி-3' டெங்கிக் கிருமி வகை தொடர்பான சம்பவங்கள் 2021ல் அதிகரித்துள்ளன. இத்தகைய அதிக எண்ணிக்கையுடன் 2022ல் காலடி எடுத்து வைப்பது, டெங்கிப் பரவலுக்கு இட்டுச் செல்லலாம் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது.