கப்பல்துறை நெருக்கடியால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நிலவும் சிக்கலைத் தீர்க்க சிங்கப்பூர் துறைமுகங்கள் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதில் ஒரு பகுதியாக, துவாஸ் துறைமுகம் இன்னமும் திறக்கப்படாதபோதும், அங்கு கொள்கலன்களை வைக்க இடம் அமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கப்பல் துறையில் கூடுதலாக 2,500 சிங்கப்பூர் ஊழியர்கள் வேலைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அத்துறை ஊழியர் அணியில் 20% உயர்வாகும்.
போக்குவரத்துக்கான மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தார். உலகளாவிய கப்பல்துறை நெருக்கடியைச் சமாளிக்க சிங்கப்பூர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
பெருந்தொற்று போன்ற காரணங்களால் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையாலும் பிற துறைமுகங்கள் மூடப்பட்டதாலும் கப்பல் தளவாடத் துறை முறையாகச் செயல் படவில்லை. அதே நேரத்தில் கப்பலில் வரும் பொருட்கள் அதிகரித்துள்ளன. பெருந்தொற்றுக்குப் பின்னர் வாடிக்கையாளர்கள் மீண்டும் அதிகப் பொருட்களை வாங்கி வருவது அதற்குக் காரணம்.
இதனால், வேறு இடங்களி லிருந்து இங்கு அனுப்பப்படும் கொள்கலன்கள், செல்ல வேண்டிய நாடுகளுக்குக் கப்பல்கள் இல்லாமல் இங்கு தேங்கியுள்ளன.
கொள்கலன்களை வைக்க, கடந்த மாதம், துவாஸ் துறைமுகத்தில் 2,000 'டிஇயூ' எனும் கொள் கலன் அளவுள்ள இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு டிஇயூ, 20 அடி கொள்கலன் பரப்பளவு கொண்டது. ஏற்கெனவே கடந்தாண்டு இறுதியில் கெப்பல் முனையத்தில் 65,000 டிஇயூ அளவுக்கு கொள்கலன்களை வைக்க இடம் அமைக்கப்பட்டது.
தங்களுக்கு ஏற்பட்ட தாமதத்தைச் சமாளிக்க சரக்குக் கப்பல் களுக்கு சிங்கப்பூர் முடிந்தவரை உதவி வருவதாக திரு சீ குறிப்பிட்டார். தேவை ஏற்பட்டால், கொள்கலன்களை வைக்க, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.
"கப்பல் நிறுவனங்கள், தங்கள் தாமதத்தை ஈடுகட்டவும் தொடர்புகளை அமைக்கவும் செயல்பாட்டுச் சிக்கல்களைத் தீர்க்கவும் சிங்கப்பூரை நாடி வருகின்றன. அதே நேரத்தில் கப்பல்களை நிறுத்துதல், மாலுமிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு சேவைகளை அவற்றுக்கு ஒரே இடத்தில் சிங்கப்பூர் வழங்கு கிறது," என்றார் திரு சீ.
ஆனால் இச்சேவைகளை வழங்குவதால் கொள்கலன்கள் சிங்கப்பூர் துறைமுகங்களில் கூடுதல் காலத்துக்கு இருக்க நேரிடுகிறது என்றும் கப்பல்கள் இங்கு வந்து அடைவதற்குக் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்துள்ளதாகவும் அவர் விவரித்தார்.
சிங்கப்பூரால் கப்பல்துறைச் சிக்கலை ஓரளவு குறைக்கத்தான் முடியும் என்றும் முழுமையாகத் தீர்க்க முடியாது என்றும் திரு சீ கூறினார்.