ஐம்பதாண்டுகளை எட்டியுள்ள ஐந்து நாடுகள் பாதுகாப்பு ஏற்பாட்டு ஒப்பந்த அமைப்பு, காலத்துக்கேற்ப செயல்படும் அதே வேளையில், இந்த வட்டாரத்துக்கு அப்பாற்பட்டு தனது செல்வாக்கைப் பெருக்குவதைப் பற்றி பரி சீலித்து வருகிறது.
சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் அடங்கிய அமைப்பின் தற்காப்பு அமைச்சர்கள், இந்த அமைப்பு ஆசியான் போன்ற மற்ற பன்னாட்டு அமைப்புகளுடன் தொடர்புகொள்ளும் சாத்தியத்தைப் பற்றி கலந்து பேசியுள்ளனர்.
மலேசியாவின் மூத்த தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசேன் நேற்று இதைத் தெரிவித்தார். ஒபப்பந்த நாடுகளின் 11வது தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.
அமைப்பைக் கட்டிக்காத்து அதன் செல்வாக்கைப் பெருவாக்குவது அதன் மிகப் பெரிய சவால் என்றபோதும் கடந்த 50 ஆண்டுகளில் கட்டிக்காத்த அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்தும் பண்பு களிலிருந்தும் வழுவப் போவதில்லை என்று அவர் சொன்னார்.
"மிரட்டல்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அதே நேரத்தில் எந்தத் தனிப்பட்ட நாடும் அத்தகைய மிரட்டல்களைத் தனியாகச் சந்திக்க முடியாது என்ற அடக்கமும் தேவை," என்று திரு ஹிஷாமுதின் கூறினார்.
ஐந்து நாடுகள் பாதுகாப்பு ஏற்பாட்டு ஒப்பந்தம், எந்த தனிப்பட்ட நாட்டையும் குறிவைக்காத தற்காப்பு அமைப்பாக தொடர்கிறது என்றார் சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென். மேலும் வலுப்பெற வலுப்பெற நண்பர்கள் கூடுவர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 1971ஆண்டு பிரிட்டிஷ் படைகள் இங்கிருந்து வெளியேறியபோது ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூர் அல்லது மலேசியா தாக்கப்பட்டால், அது பற்றி கலந்தாலோசிக்க அது பொதுத் தளத்தை அமைத்துத் தந்துள்ளது.
ஒப்பந்த நாடுகள், கிட்டத்தட்ட ஆண்டுதோறும் கூட்டு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபடுவதுடன், பயங்கரவாதம், மனிதாபிமான உதவி போன்றவற்றில் ஒத்துழைக்கின்றன.