சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் இம்மாதம் 19ஆம் தேதி முதல் தளர்த்தப்பட்டன.
இருந்தாலும் அதிக எண்ணிக்கையிலான அத்தகைய ஊழியர்கள் விரைவில் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு அவ்வளவாக இருக்காது என்றே தெரிகிறது.
ஊழியர்கள் தாக்கல் செய்யும் விடுப்பு விண்ணப்பங்களை மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்போவதாக மூன்று பொது சுகாதாரப் பராமரிப்புத் துறை குழுமங்களும் தெரிவித்தன.
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக பல செயல்பாடுகளும் மேலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு தாங்கள் செயல் படப்போவதாக அந்தக் குழுமங்கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் விதிக்கப்பட்டு இருந்த வெளிநாட்டுப் பயண விடுப்பு விண்ணப்பப் பரிசீலனை நடைமுறைத் தடையை அகற்ற சுகாதார அமைச்சு அண்மையில் முடிவு செய்தது.
கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் நவம்பர் 21வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. இத்தகைய ஒரு சூழலில், அந்தத் தடையை அமைச்சு அகற்றி உள்ளது.
இது பற்றிக் கருத்து கூறிய தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் மனிதவளத் துறை தலைமை அதிகாரி திருவாட்டி ஒலிவியா டே, போதிய அளவுக்கு மனிதவளம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்றார்.
ஆகையால் வெளிநாட்டுப் பயண விடுப்பு விண்ணப்பங்களுக்கான அங்கீகாரம், ஊழியர்களின் தேவையைப் பொறுத்து கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்றார் அவர்.
இது பற்றி கருத்துக் கூறிய சிங்ஹெல்த் குழுமத்தின் துணை தலைமை நிர்வாகி பேராசிரியர் ஃபோங் கோக் யோங், போதிய அளவுக்கு ஊழியர்கள் இருப்பதை மேற்பார்வையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டி இருக்கும் என்றார்.
ஊழியர்கள் முன்னதாகவே நன்கு திட்டமிட்டு செயல்பட ஊக்கமூட்டப்படுகிறார்கள் என்று தேசிய பல்கலைக்கழக சுகாதார குழுமத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
குடும்பத்தைவிட்டு நீண்டகாலமாகப் பிரிந்து சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.