போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய ஜஸ்டின் லீ, 17, என்ற இளைஞர் பிப்ரவரி 3ஆம் தேதி கைதானார். ஜூன் 24ஆம் தேதி அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அந்த இளைஞர், செப்டம்பர் 16ஆம் தேதி புளோக் ஒன்றின் மேலிலிருந்து கீழே விழுந்து மாண்டுவிட்டார்.
அவரின் மரணம் பற்றி புலன்விசாரணை நடத்தியதாக சிங்கப்பூர் போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
அந்த இளைஞரின் ரத்தத்திலும் சிறுநீரிலும் போதைப்பொருள் மற்றும் தூக்க மருந்து தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், குற்றம் சுமத்தப்பட்டு இருந்த அந்த இளைஞரை தன் அதிகாரிகள் நியாயமான முறையிலும் நிபுணத்துவ முறையிலும் நடத்தியதாக நேற்று வெளியிட்ட விரிவான அறிக்கையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.
இந்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதியும் ஜூன் 23ஆம் தேதியும் ஜஸ்டின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இரண்டு பரிசோதனைகளின் போதும் கவலைக்குரிய அம்சம் எதையும் மருத்துவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்றும் அந்தப் பிரிவு அறிக்கையில் கூறியது.
புலன்விசாரணை, வழக்குத் தொடுப்பு நடைமுறைகளில் தேவை யற்ற தாமதம் எதுவும் இல்லை என்பது இந்தப் பிரிவின் உள் புலன்விசாரணைகள் மூலம் தெரியவந்ததாகவும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அறிக்கையில் கூறியது.