தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பொதுமக்களுக்கு இஸ்தானா திடல் திறந்திருக்கும். நுழைவு இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திடலின் புறவெளிப் பகுதிகளை மக்கள் பார்வையிடலாம். தோட்டங்களைக் கண்டு களிக்கலாம்.
ஆனால் பிரதான கட்டடத்திற்குள் அனுமதி இருக்காது.
கலை நிகழ்ச்சிகள், உணவு அல்லது நினைவுப்பொருள் விற்பனை எதுவும் இருக்காது.
பார்வையாளர்கள் எப்போதும் முகக்கவசத்துடன் இருக்கவேண்டும் என்பது கட்டாயமானது.
சாப்பிடுவது, பானம் அருந்துவது உள்ளிட்ட முகக்கவசம் அற்ற எந்தச் செயலுக்கும் அனுமதி இருக்காது. வருகையாளர்கள் கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த பாதுகாப்பு இடைவெளி தூதர்கள் பணியில் இருப்பார்கள்.
தீபாவளி நாளான நவம்பர் 4ஆம் தேதி இஸ்தானாவுக்குச் செல்ல விரும்புவோர் முன்கூட்டியே அக்டோபர் 25ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கும் அக்டோபர் 26ஆம் தேதி முற்பகல் 10 மணிக்கும் இடையில் நுழைவுச் சீட்டுக்கு https://istanaoh2021.myevent360.com/96/participation_form என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அவர்கள் காலை 9 மணி, 11 மணி, பிற்பகல் 1 மணி, பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் எந்தவோர் இரண்டு மணி நேரத்தையும் தங்கள் விருப்பமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
மின்னணுச் சீட்டுக் குலுக்கு மூலம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் இரண்டு நுழைவுச் சீட்டுகள் கிடைக்கும்.