வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டு விலை மூன்றாம் காலாண்டில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக மூன்றாவது காலாண்டில்தான் ஆகத் துரிதமான ஒன்பது மாத வளர்ச்சியை வீவக மறுவிற்பனை வீட்டு விலை கண்டிருப்பதாக நேற்று வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.
இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மறுவிற்பனை விலை 2.9% அதிகரித்திருந்தது. 2.7% என்ற வீவகவின் முன்னுரைப்பைக் காட்டிலும் கூடுதல் விகிதம் பதிவாகியுள்ளது.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வீவக வீட்டு விலை 9.1% வளர்ச்சி கண்டுள்ளது. கடைசியாக 2010ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வீட்டு விலை 11.3% வளர்ச்சி கண்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து அதேபோன்ற துரித வளர்ச்சியைக் காண முடிவதாகக் கூறப்ட்டது.
முதிர்ச்சியடைந்த வட்டாரமான குவின்ஸ்டவுனில், இடைநிலையாக $926,000 விலையில் ஐந்தறை வீடுகள் விற்பனையாகின. மூன்றாம் காலாண்டில் பதிவான ஆக விலையுயர்ந்த தொகை இது என்று கூறப்படுகிறது. இதையடுத்து, புக்கிட் மேராவில் $822,500 விலையிலும் தோ பாயோவில் $818,000 விலையிலும் மறுவிற்பனை வீடுகள் விற்பனையாகின.
சிங்கப்பூரர்கள் அதிகமாக நாடும் குடியிருப்பு வட்டாரமாக குவின்ஸ்டவுன் உள்ள நிலையில் முதல் காலாண்டில் ஐந்தறை வீடுகளின் இடைநிலை விலையாக $932,000 என்றும் முதல் காலாண்டில் $820,000 என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே, மறுவிற்பனை பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மூன்றாம் காலாண்டில் 19.4% அதிகரித்திருந்தது. இரண்டாம் காலாண்டில் 7,063 வீடுகள் விற்கப்பட்டதை அடுத்து மூன்றாம் காலாண்டில் 8,433 வீடுகள் கைமாறின.
ஆண்டு அடிப்படையில் இதே ஜூலை முதல் செப்டம்பர் காலகட்டத்தில் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகளைக் காட்டிலும் இவ்வாண்டு 8.3% கூடுதல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் மூன்றாம் காலாண்டில் குறைவான வீடுகளையே வீவக வாடகைக்கு அனுமதித்தது. இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்றாம் காலாண்டில் 5.1% குறைவாக 10,417 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன. இவ்வாண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, 57,321 வீவக வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இது இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 0.8% குறைவு.
மறுவிற்பனை விலை, தொடர்ந்து ஆறாவது காலாண்டாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு இறுதிவரை வளர்ச்சி தொடரும் என்று மறுவிற்பனைச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

