தட்டச்சு இயந்திரம்போல் காட்சி அளிக்கும் புகழ்பெற்ற 'கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ்', அரசாங்கத்தால் பாதுகாக்கப்படும் கட்டடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகரச் சீரமைப்பு ஆணையம் (யுஆர்ஏ) இப்பரிந்துரையை முன்வைத்து ஓராண்டுக்குப்பின், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இவ்வாறு பாதுகாக்கப்படும் கட்டடமாக அறிவிக்கப்பட்டதால் கூட்டு விற்பனைக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று கட்டட உரிமையாளர்களிடையே எழக்கூடிய அக்கறைகளைக் களைய, இதற்கு முன் நடைமுறைப்படுத்தாத ஒரு திட்டத்தை யுஆர்ஏ அறிவித்தது.
இதன்படி, தளத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவோருக்கு அத்தளத்தை மேலும் கவர்ச்சியுடையதாக்கும் மேம்பாட்டுத் தெரிவுகள் தொடர்பில் ஊக்குவிப்புகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரில் இவ்வாறு நவீன, பெருமளவிலான, நிலப்பட்டா கொண்டு பாதுகாக்கப்படும் கட்டடமாக 'கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ்' திகழ்கிறது என்று முன்னரே பதிவுசெய்யப்பட்ட காணொளி வழி ஃபேஸ்புக்கில் தெரிவித்த திரு லீ, இம்முடிவைச் சாதாரணமாகக் கருதிவிடக்கூடாது என்றார்.
பாதுகாக்கப்படுவது என்பது ஒருவகை கட்டுப்பாடு எனச் சில உரிமையாளர்கள் கருதலாம். கூட்டு விற்பனைக்குத் திட்டமிட்டு அதில் வரும் தொகையைக் கொண்டு தங்களின் ஓய்வுக் காலத்தையும் அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். இதைத் தாம் அறிந்திருப்பதாக திரு லீ கூறினார்.
கூட்டு விற்பனை முயற்சிகளை, பாதுகாக்கப்படும் கட்டடம் என்ற அறிவிப்பு எந்த வகையிலும் வலுவற்றதாக்காது என்பதற்காக கட்டடத்திற்குப் புதுப்பொலிவு தருவதன் தொடர்பில் வாங்குவோருக்கு யுஆர்ஏ ஊக்குவிப்புகள் அளிக்க உள்ளது.
"இந்தத் தளத்திற்கான வளர்ச்சி வாய்ப்பு, பாதுகாக்கப்படும் என்ற நிலையுடன் அதிகரிக்கிறது," என்றார் திரு லீ.
பாதுகாக்கப்படும் பிரதான கட்டடத்திற்கு அருகில் கிட்டத்தட்ட 30 மாடி உயரத்தில் கோபுரக் கட்டடம் ஒன்றை மேம்பாட்டாளர்கள் கட்டுவதற்குப் புதிய ஊக்குவிப்புத் திட்டம் அனுமதிக்கும்.
எதிரே அமைந்துள்ள அரசாங்க நிலத்தையும் இணைந்து தளத்தின் எல்லையை விரிவுபடுத்தலாம் என்று கூறப்பட்டது. இதனால் நீக்குப்போக்குடன் வடிவமைப்பைத் தீர்மானிக்கலாம். மேம்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதற்காக வரிச் சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டம், கோல்டன் மைல் காம்ப்ளக்சுக்கு மட்டும் வழங்கப்படுவதாக திரு லீ குறிப்பிட்டார்.