தவறான வாட்ஸ்அப்
செய்திகளை நம்பாதீர்
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் பலனளிக்கவில்லை என்று தெரிவித்து தவறாக வழிகாட்டும் வாட்ஸ்அப் செய்திகள் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களை சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று எச்சரித்தார்.
கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 40 விழுக்காட்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட வர்கள் என்று ஒரு செய்தி தெரிவிப்பதைச் சுட்டினார்.
அந்தச் செய்தி தவறான வழிகாட்டும் ஒரு செய்தி என்று தான் கருதுவதாக திரு ஓங் கூறினார்.
"மக்கள்தொகையில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் இருந்தாலும் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட வராகத்தான் இருப்பார். அதை வைத்து தடுப்பூசி செயல்படவில்லை என்று கூறிவிட முடியாது. மக்கள் பாதிப்பு விகிதாச்சாரத்தையும் கணக்கீட்டு அடிப்படை யையும் ஆராய வேண்டும்," என்று அமைச்சர் கூறினார்.
முதியோர் சுறுசுறுப்புக்கு உதவி
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள முதியோர்கள் கலந்துகொண்டு சுறுசுறுப்பாக இருக்க மக்கள் கழகம் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யும்.
நிகழ்கால பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவற்றில் முதியவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.
அத்தகைய நடவடிக்கைகள் பாதுகாப்பான விதத்தில் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறும் என்று அமைச்சு நேற்று அறிவித்தது. மக்கள் கழகம் பின்னொரு தேதியில் விவரங்களை வெளியிடும்.
தடுப்பூசி ஒத்துக்கொள்ளாதோர்க்கு சிறப்புச் சலுகை ஏற்பாடு
தேசிய தடுப்பூசித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள எந்தவொரு தடுப்பூசியும் ஒத்துகொள்ளாத மக்களுக்குச் சிறப்பு சலுகை அளிக்கப்படும். கடைத்தொகுதிகள், அங்காடிக்கடைகள், ஆகியவற்றுக்கு அவர்கள் நவம்பர் 1 முதல் போகலாம் என்று சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது.
இதன் தொடர்பில் மேல் அறிவிப்புகள் பின்னர் வெளியாகும் என்றும் அமைச்சு கூறியது.
அன்றாடம் 20,000 பேருக்கு
பூஸ்டர் தடுப்பூசி
சிங்கப்பூரில் அன்றாடம் ஏறத்தாழ 20,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
இன்றைய தேதியில் கிட்டத்தட்ட 600,000 பேர் அந்த ஊசியை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள்தொகையில் 94 விழுக்காட்டினர் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து இருக்கிறார்கள் அல்லது போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கும் 6 விழுக்காட்டினரில் 70,000 முதியவர்கள் உள்ளனர். அவர்களில் சிலருக்குத் தேசிய திட்டத்தில் இடம்பெற்று உள்ள தடுப்பூசிகள் ஒத்துக்கொள்வதில்லை.
ஆகையால் அத்தகைய மக்களுக்காக சினோவேக் தடுப்பூசி வாய்ப்பு வழங்கப்படும் என்று திரு ஓங் விளக்கினார்.