கொவிட்-19 கிருமியுடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்ட சூழலில் சிங்கப்பூர் மிகவும் கவனமான அணுகுமுறையைக் கைக்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் விளக்கம் அளித்தார்.
சில நடவடிக்கைகளை அனுமதிப்பது, மற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பது என்ற அணுகுமுறையை சிங்கப்பூர் நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார் அவர்.
இத்தகைய அணுகுமுறையைக் கையாண்டு சில சங்கடங்களுடன் நாம் வாழும் பட்சத்தில் உண்மையான சவாலை நாம் சமாளித்துவிட முடியும். கடுமையான பாதிப்பையும் மரணங்களையும் கூடுமானவரை குறைத்து அதேநேரத்தில் கட்டம் கட்டமாக பொருளியலைத் திறந்துவிட நம்மால் முடியும் என்றாரவர்.
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று விகிதத்தைக் கட்டுப்படுத்த கிருமிக்கு எதிரான மூன்று 'தடைகளை' சிங்கப்பூர் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.
எல்லை கட்டுப்பாடுகள், தடுப்பூசி, பாதுகாப்பு நிபந்தனைகள் ஆகியவை அந்த மூன்று தடைகள். சிங்கப்பூரின் அணுகுமுறை உலகத்திலேயே தனித்துவமான ஒன்று என்று கூறிய அவர், கிருமியைத் துடைத்தொழிப்பது கிருமியோடு வாழ்வது இரண்டையும் சிங்கப்பூர் சாதித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
பல நாடுகளுடன் ஒப்பிடுகை யில் சிங்கப்பூரில் மில்லியன் பேருக்கு ஏறத்தாழ 50 பேர் என்ற நிலையில் மரண விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது.
ஆகையால் உலகின் இதர பல நாடுகளுடன் ஒப்பிடுகையில், இதுவரை சிங்கப்பூர் தன் மக்களுக்கு மிக வலுவான பாதுகாப்பை அளித்து இருக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
அனைத்துலக பயணிகளுக்கு சிங்கப்பூர் கதவுகளைத் திறந்துவிடுவதால் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய பல நன்மைகளையும் திரு ஓங் சுட்டினார்.

