சில்லுகளைத் தயாரிக்கும் 'மைக்ரோன் டெக்னாலஜி' நிறுவனம், வரும் ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்களை ஆய்வு மேம்பாடு மற்றும் உற்பத்திப் பிரிவுகளில் வேலைக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.
நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களில் ஓர் அம்சமாக ஆள்சேர்ப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.
அமெரிக்காவைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கிவரும் நிறுவனத்தில் ஏற்கெனவே 1,500 சிங்கப்பூர் ஊழியர்கள், வேலைக்குச் சேர்க்கப்பட்டனர்.
2019ஆம் ஆண்டில் நிறுவனத்தின் உட்லண்ட்ஸ் வளாகம் விரிவுபடுத்தப்பட்டதை அடுத்து இந்த 1,500 ஊழியர்களும் நியமிக்கப்பட்டதாக நிறுவனத்தின் அனைத்துலக செயல்பாட்டுப் பிரிவின் நிர்வாகத் துணைத் தலைவர் மணிஷ் பாட்டியா கூறினார்.
உலகளவில் அதன் உற்பத்தி, ஆய்வு மேம்பாட்டுப் பிரிவுகளை நிறுவனம் அடுத்த பத்தாண்டுகளில் வலுவாக்குவதற்காக ஏறத்தாழ 150 பில்லியன் அமெரிக்க டாலரை (S$202 பில்லியன்) முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோன் புதன்கிழமையன்று அறிவித்ததை அடுத்து, சிங்கப்பூரைப் பொறுத்தவரை நிறுவனத்தின் திட்டம் என்ன என்பதை திரு பாட்டியா தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் சில்லுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கார்கள், மருத்துவச் சாதனங்கள் போன்றவை உட்பட வெவ்வேறு பிரிவுகளில் உற்பத்தியும் இதனால் தடைப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மைக்ரோன் நிறுவனத்தின் கீழ் கிட்டத்தட்ட 8,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
அரசாங்கத்துடன் இணைந்து மேலும் உயர் மதிப்பிலான உற்பத்தி, ஆய்வு மேம்பாட்டு ஆற்றல்களை ஏற்படுத்துவதே மைக்ரோன் நிறுவனத்தின் இலக்கு என்று திரு பாட்டியா கூறினார்.

