போன விஸ்தா அருகில் அமைந்துள்ள உலு பாண்டான் சமூக மன்றத்துக்குள் கார் ஒன்று சென்று மோதியதில் இருவர் காயமுற்றனர்.
நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு மாலை 6.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் நேற்று கூறினர்.
காரில் இருந்த 70 வயது ஆண் ஓட்டுநரும் அவருடன் இருந்த 66 வயது பெண் பயணியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.
இருவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சமூக மன்றத்தின் வாசல் கண்ணாடிக் கதவை உடைத்துக்கொண்டு கார் சென்றதாகவும் பின்னர் சமூக மன்றத்தின் வரவேற்புப் பகுதியின் பின்புறம்வரையில் கார் போயிருந்ததாகவும் 'ரோட்ஸ்.எஸ்ஜி' ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்து நடந்ததை அடுத்து பதிவுசெய்யப்பட்ட காணொளி ஒன்று, பல சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
படம்: ஷின் மின்