கொவிட்-19 கொள்ளைநோயும் அதனால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மீதே மேலும் வலுவான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று கூறினார்.
வீட்டுப் பராமரிப்பில் அதிகப் பொறுப்புகளைப் பெண்கள் ஏற்றுள்ள நிலையில் கொள்ளைநோய் சூழலில் வேலையையும் பராமரிப்புப் பணியையும் பெண்கள் ஒரே சமயத்தில் சமாளிக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜாமியா சிங்கப்பூர் ஏற்பாடு செய்திருந்த '28வது முன்மாதிரி அன்னை' விருது நிகழ்ச்சியின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மீது மனநல ரீதியாக இந்த கொள்ளைநோய் அதிக பாதிப்பைத் தந்துள்ளதாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். சமூக, பொருளியல் ரீதியாக கொள்ளைநோய் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால் பாதிக்கப்படுவது, வீட்டில் இருந்தவாறு கற்றலை மேற்கொள்ளும் பிள்ளைகளுக்கு உதவுவது போன்றவற்றைப் பெண்கள் அதிகம் சந்திப்பதால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்றார் திருவாட்டி ஹலிமா.