சிங்கப்பூரின் ஆகப் பெரிய சிகிச்சை சார்ந்த தோட்டம், ஜூரோங் லேக் கார்டன்ஸ் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இத்தோட்டத்தில் சிறப்புத் தேவைகளுடைய சிறார், மூத்தோருக்கான அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இவ்வாறு சிறப்புத் தேவைகளுடைய பிள்ளைகளுக்கான ஒரு பகுதியை ஒதுக்கும் முதல் தோட்டம் இது என்று தேசிய பூங்காக்கள் கழகம் நேற்று தெரிவித்தது. கிட்டத்தட்ட 3,100 சதுர மீட்டர் அளவில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
தோட்டத்தின் ஒரு பகுதியில் கருப்பொருள் சார்ந்த வகையில் செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றால் நினைவலைகள் தூண்டப்படும் என்றும் உணர்வுகள் தட்டி எழுப்பப்படும் என்றும் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் இவ்வாறு சிகிச்சை சார்ந்து திறக்கப்பட்டுள்ள ஏழாவது தோட்டம் இது.
தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நேற்று அதிகாரபூர்வமாகத் தோட்டத்தைத் திறந்துவைத்தார்.
அறிவியல் சார்ந்த கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இத்தோட்டம், இயற்கையுடன் மக்கள் தொடர்புபடுத்திக்கொள்ளவும் வருகையாளர்களின் மனநலனை மேம்படுத்தவும் உதவும் என்று கழகம் தெரிவித்தது.
கிட்டத்தட்ட $1 மில்லியனுக்கு மேல் கிடைக்கப்பெற்ற நன்கொடை மூலம் சிகிச்சை தோட்டத்தை இந்த அளவுக்கு மேம்படுத்த முடிந்ததாகக் கூறப்பட்டது.
முதல் சிகிச்சைத் தோட்டம் ஹோர்ட்பார்க் பகுதியில் 2016ல் திறக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் 30 சிகிச்சைத் தோட்டங்களை அமைக்க வேண்டும் என்ற இலக்கைக் கொண்டுள்ளது கழகம்.