சனிக்கிழமை 23ஆம் தேதி நிலவரப்படி கொரோனா தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சிங்கப்பூரில் மேலும் ஆறு பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்கள் 61 வயதுக்கும் 91 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இறந்தவர்களில் நால்வர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்று சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
அவர்கள் அனைவரும் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் ஆவர். இருவர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள் என்று அமைச்சு கூறியது.
அனைவருக்கும் ஏற்கெனவே வேறு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தன என்று கூறிய அமைச்சு, மேல்விவரம் அளிக்கவில்லை.
இதன் மூலம், சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றின் தொடர்பில் இதுவரை 300 பேர் மாண்டுவிட்டனர்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிதாக 3,598 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
சமூகத்தில் 2,804 பேருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 790 பேருக்கும் தொற்று ஏற்பட்டது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் நான்கு பேருக்கும் தொற்று உறுதியானது.
உள்ளூரில் கொவிட்-19 கிருமி தொற்றியவர்களில் 471 பேர், 60 வயதைத் தாண்டிவர் ஆவர்.