சிங்கப்பூரில் 18 வயதிற்கு மேற்பட்டோரில் கிட்டத்தட்ட 16 விழுக்காட்டினர் மின்னிலக்க நாணயம் வைத்திருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
‘ஃபைண்டர்.காம்’ எனும் இணையத்தளம், மின்னிலக்க நாணயம் தொடர்பில் 22 நாடுகளைச் சேர்ந்த 40,645 பேரிடம் ஒரு கருத்தாய்வை மேற்கொண்டது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 985 பேர் ஆய்வில் பங்குகொண்டனர். அவர்களில் 15.6 விழுக்காட்டினர் தாங்கள் மின்னிலக்க நாணயம் வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
ஆய்வில் பங்குகொண்ட 22 நாடுகளில், மின்னிலக்க நாணயம் வைத்திருப்போர் விகிதத்தில் சிங்கப்பூர் ஆறாமிடத்தைப் பிடித்துள்ளது.
மலேசியா (18%), ஆஸ்திரேலியா (18%), இந்தோனீசியா (17%), ஹாங்காங் (16%) ஆகியவை ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மற்ற நாடுகளில் சில.
நைஜீரியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர், குறைந்தது ஒரு மின்னிலக்க நாணயத்தையேனும் வைத்திருப்பது ஆய்வில் தெரியவந்தது. ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான விகிதத்துடன் ஜப்பான் கடைசி இடத்தைப் பிடித்தது.
உலகளவில் 11.4 விழுக்காட்டினரிடம் மின்னிலக்க நாணயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் ‘ஃபைண்டர்.காம்’ நடத்திய இதுபோன்ற ஒரு ஆய்வில், சிங்கப்பூர் பெரியவர்களில் 19 விழுக்காட்டினர் மின்னிலக்க நாணயம் வைத்திருந்தது தெரியவந்தது. இப்போது அவ்விகிதம் குறைந்துவிட்டது.
ஆய்வில் பங்குகொண்டோரில், பிட்காயின் (66.7%), எத்தீரியம் (52.4%), கார்டானோ (23%) ஆகியவை செல்வாக்குமிக்க மின்னிலக்க நாணயங்களாக உள்ளன. ஆய்வில் பங்கேற்ற சிங்கப்பூரில் 8.2 விழுக்காட்டினர் ‘எத்தீரியம்’ மின்னிலக்க நாணயத்தை வைத்துள்ளனர்.