சிங்கப்பூரின் ஆகப் பெரிய ரயில், பேருந்து பராமரிப்புச் சேவை நிலையம் சாங்கியில் கட்டுப்பட்டு வருகிறது. வரும் 2025ஆம் ஆண்டு அதன் கட்டுமானம் நிறைவுபெறும்.
அப்போது மூன்று வெவ்வேறு ரயில் பாதைகளைச் சேர்ந்த சுமார் 200 ரயில்களையும் அதிகபட்சம் 760 பேருந்துகளையும் அங்கு நிறுத்தி பராமரிக்க முடியும்.
ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பராமரிப்புச் சேவை நிலையம், அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டில் உள்ள 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்படும் சாங்கி ரயில் கிடங்குக்கு அருகில் புதிய நிலையம் உள்ளது.
அதன் கட்டடம் மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும்.
சுமார் இரண்டு பில்லியன் வெள்ளிச் செலவில் கட்டப்படும் அந்தக் கிடங்கின் கட்டுமானப் பணிகள் எந்த அளவில் உள்ளன என்பது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் விவரம் அளிக்கவில்லை. ஆனால் கிடங்கு வரும் 2025ல் கட்டி முடிக்கப்படும் என்று அது கூறியது. அந்தக் கிடங்கு 2024ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. கிருமிப்பரவலால் தாமதமடைந்த கட்டுமானத் திட்டங்களில் இதுவும் ஒன்று.
கட்டடத்தின் நிலத்தடி மாடிக்கான பணிகள் முடிவுற்றதாகவும் மேலே உள்ள இரண்டு மாடிகளுக்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.