களவாடப்பட்டு, இணையத்தில் விற்கப்பட்ட வாடிக்கையாளர் விவரங்கள்
இணையத்தில் ஊடுருவல் செய்வோர், ஃபுல்லர்டன் ஹெல்த் எனும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் களவாடி இணையத்தில் விற்றுள்ளனர். அந்த தனியார் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் கணினிக் கட்டமைப்பு இம்மாதம் ஊடுருவப்பட்டது.
இம்மாதம் 11ஆம் தேதி, அந்தத் தககவல்கள், இணைய ஊடுருவல் செய்வோர் கூடும் இணைய வழி அறைகளில் விற்பனைக்கு விடப்பட்டன. அந்தத் தகவல்களை பிட்காய்ன் மின்னிலக்க நாணயத்தைக் கொண்டு 600 அமெரிக்க டாலர் ($810) வெள்ளிக்கு வாங்க முடிந்தது. அந்த விற்பனை கடந்த 22ஆம் தேதி நிறுத்தப்பட்டது.
சுமார் 400,000 பேரின் தகவல்களைக் களவாடியதாக ஊடுருவல்காரர்கள் கூறியுள்ளனர்.
ஊடுருவல்காரர்கள் பதிவேற்றம் செய்த தகவல்களில், நிறுவனத்தின் வாடிக்கையாளர் பெயர்கள், அடையாள அட்டை எண்கள், வங்கிக் கணக்குகள், பணியிடங்கள், காப்புறுதித் திட்டங்கள், மருத்துவ விவரங்களும் அவர்களது பிள்ளைகளின் விவரங்களும் இருந்தன.
பூன் லேயில் $2 மில்லியன் மதிப்புள்ள
மின்புகைப்பொருட்கள் பிடிபட்டன
சுகாதார அறிவியல் ஆணையம்
2 மில்லியன் வெள்ளிக்கு மேற்பட்ட 'இ வேப்பரைசர்' எனும் மின்புகைச்சாதனங்களையும் (படம்) அவற்றின் பாகங்களையும் கைப்பற்றியுள்ளது. கடந்த 11ஆம் தேதி ஆணையம் மேற்கொண்ட திடீர்ச் சோதனையில் அவை கைப்பற்றப்பட்டன.
சுகாதார அறிவியல் ஆணையம் கைப்பற்றிய புகையிலைப் பொருட்களிலேயே எண்ணிக்கையிலும் சந்தை மதிப்பிலும் இதுவே ஆக அதிகமாகும். விசாரணையில் மூவர் உதவி வருவதாக ஆணையம் தெரிவித்தது.
துப்பு ஒன்றின் பேரில், பூன் லேயில் உள்ள ஒரு கிடங்கில் ஆய்வு நடத்தியதாக ஆணையம் நேற்று கூறியது.
அங்கு 10,057 மின்புகைச் சாதனங்கள், அவற்றுக்கான 48,822 பாகங்கள், 187 மின்திரவங்கள் ஆகியவை பிடிபட்டதாக ஆணையம் கூறியது. இவற்றின் மொத்த மதிப்பு $2,260,825 என்று அது குறிப்பிட்டது.
இதன் வழி, சட்டவிரோதமாக 'இ வேப்பரசைர்களை' விநியோகிக்கும் சங்கிலியை முறியடித்துள்ளதாக ஆணையம் கூறியது.
பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட மாணவருக்கு பத்து மாதம் சிறை
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு பெண்ணுக்குப் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்த மாணவருக்கு பத்து மாதம் சிறையும் மூன்று பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன. கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு இருவரும் படிப்பதற்காகச் சந்தித்தபோது சம்பவம் நடந்தது.
தற்போது 25 வயதாகும் லீ யான் ரூ, பாதிப்புக்கு ஆளான பெண்ணை அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தில் சந்தித்திருந்தார்.
மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி - ஷனாஸ் நேற்று தண்டனையை விதிக்கும் முன்னர், இச்சம்பவத்தில் பாலியல் சுரண்டலின் அளவு மிகவும் அதிகம் என்றார்.
லீ, அப்பெண்ணை இலேசாக மட்டும் தொடவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணைக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி, லீ பாலியல் தொந்தரவு தந்து குற்றம் புரிந்தார் என்று நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

