குற்றமிழைத்த தம்பதி
சுகாதார அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக சீனாவைச் சேர்ந்த தம்பதியினர் குற்றவாளிகள் என்று நேற்று அறிவிக்கப்பட்டனர். ஷி ஷா, 38, என்னும் பெண்மணி மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. ஏற்கெனவே கிருமி தொற்றிய அவரது கணவரான ஹு ஜுன், 40, என்பவரைப் பற்றிய தகவல்கள், நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளிடம் அப்பெண் பொய் கூறியதாக நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தம்பதியினருக்கான தண்டனை நவம்பர் 10ல் அறிவிக்கப்படக்கூடும்.
ஆடவர் தப்பியோட உதவிய மூவர்
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $1.2 பில்லியன் முதலீட்டு மோசடி ஒன்றில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் ஒருவர் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவியதாக மூன்று ஆடவர்கள் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. கீரன் மார்கஸ் ஃபாங் குவான் வெய், 31, ஆல்வின் ஒயே வெய் ஸோங், 37, டிங் குவோன் சுவோ, 63, ஆகியோரே அந்த மூவர். சிங்கப்பூரர்களான இவர்கள், இங் யு ஸி, 34, என்னும் வர்த்தகர் மீது போலிஸ் விசாரணை நடைபெறுவது தெரிந்தும் அவர் சிங்கப்பூரை விட்டு ஓட இவ்வாண்டு ஏப்ரல் மாதம் உதவியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வேண்டுமென்றே நீதியைத் தடுக்கச் சதி செய்ததாக இந்த மூவர் மீதும் தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. டிங் மீதும் ஒயே மீதும் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
சிறுவனை நிர்வாணப்படுத்திய ஆடவருக்குச் சிறைத் தண்டனை
ஈராண்டுகளுக்கு முன் நிகழ்ந்த முறைத்துப் பார்க்கும் சம்பவம் தொடர்பில் பதின்ம வயது சிறுவனை அவமானப்படுத்தியது தொடர்பாக ஆடவர் ஒருவருக்கு நேற்று மூன்று வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. துன்புறுத்தல் மற்றும் வேண்டுமென்றே காயப்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக முகம்மது நூர் ஃபரிஸ்வான் ரிஸ்வான், 27, எனப்படும் அந்த ஆடவருக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019 மார்ச் 12ல் சம்பவம் நிகழ்ந்தபோது பாதிக்கப்பட்ட சிறுவனின் வயது 17. பதின்ம வயதினர் என்பதால் அவரைப் பற்றிய விவரங்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை. முறைத்துப் பார்த்ததற்குத் தண்டனையாக மூன்று இளையர்கள் ஒன்றுகூடி அச்சிறுவனுக்கு இரண்டு தெரிவுகளைக் கூறினர். அடிவாங்குவது அல்லது உடைகளைக் களைவது ஆகியன அத்தெரிவுகள். அடி வாங்குவதைத் தவிர்க்க உடைகளை அவிழ்க்க அச்சிறுவன் சம்மதித்தார். அது வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் பகிரப்பட்டு பின்னர் சமூக ஊடகங்களில் பரவியது. உடைகளை அவிழ்த்து நிர்வாணக்கோலமானதும் அதனை தமது பள்ளித்தோழர்கள் பலர் பார்த்ததும் சிறுவனுக்கு பெருத்த அவமானத்தைக் கொடுத்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். இச்சம்பவத்தில் தொடர்புடைய டேனியல் முகம்மது யாஷிம், 23, என்பவருக்கு இவ்வாண்டு செப்டம்பர் 16ல் 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளுடன் சிங்கப்பூர் ஆலோசனை
சிங்கப்பூரும் ஐக்கிய அரபு சிற்றரசுகளும் தங்களது நாட்டின் கொவிட்-19 நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர். அபுதாபிக் கும் துபாய்க்கும் கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாள் வருகை அளித்த சிங்கப்பூரின் பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா சையது அல்-நேயனைச் சந்தித்து உரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான உன்னத அரசதந்திர உறவுகளை அவர்கள் மறுஉறுதிப்படுத் தினர். டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் பொன் விழா கொண்டாடப்பட இருப்பதையொட்டி சிங்கப்பூரின் வாழ்த்துகளை அமைச்சர் ஷேக் அப்துல்லாவிடம் டாக்டர் மாலிக்கி தெரிவித்துக்கொண்டார். மேலும் மத்திய கிழக்கில் முதல்முறையாக நடத்தப்படும் 'எக்ஸ்போ 2020 துபாய்' நிகழ்வை ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஏற்று நடத்துவதற்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். முன்னதாக, அந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் அரங்கிற்கு டாக்டர் மாலிக்கி வருகை அளித்ததாக சிங்கப்பூரின் வெளி யுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்தது.

