லிட்டில் இந்தியாவில் குடிபோதையில் இருந்த 23 வயது ஆடவர் ஒருவர், போலிஸ் கார் ஒன்றை அடித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 23) இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது. இதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
அதில், மஞ்சல் டீ-சட்டை அணிந்திருக்கும் ஆடவர் ஒருவர், ரோச்சோர் அக்கம்பக்க காவல் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலிஸ் காரை நோக்கிச் செல்கிறார். அந்த காரின் முன்பகுதியை அடித்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அவர் சென்றுவிடுகிறார்.
பின்னர், போலிஸ் அதிகாரிகள் சிலர் அவரைப் பின்தொடர்கின்றனர்.
“குடிபோதையில் இருந்த 23 வயது ஆடவர் ஒருவர், பொதுமக்களுக்குத் தொந்தரவு தந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்,” என்று போலிஸ் பேச்சாளர் கூறினார்.
சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.