இர்ஷாத் முஹம்மது
தீவிரவாதத்தை எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்துடனும் தொடர்புபடுத்துவது தவறானது என்றும் ஒவ்வொரு சமயத்திலும் அவரவர் காரணங்களுக்காக சமயத்தைத் தவறான வழியில் பின்பற்றும் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
பௌத்தம், கிறிஸ்துவம், இந்து, இஸ்லாம் என வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் இவ்வட்டாரத்தில் இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, ஒரு குறிப்பிட்ட சமயத்துடன் தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தும் சிந்தனையிலிருந்து விடுபட அவர் அறைகூவல் விடுத்தார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு கல்விக் கழகம் 'ஸூம்' மெய்நிகர் வழியே நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த விரிவுரையின் கேள்வி-பதில் அங்கத்தில் தீவிரவாதத்திற்கான சிங்கப்பூரின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
"அரசியல் காரணங்களுக்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ ஒவ்வொரு சமயத்திலும் அந்தச் சமயத்தைத் தவறான வழியில் பயன்படுத்துவோர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்," என்றார் அவர்.
மத்திய கிழக்கு வட்டாரம் பற்றிய ஆழமான புரிதலை ஊக்கு வித்த மறைந்த முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் பெயரில் ஆண்டு தோறும் ஏற்பாடு செய்யப்படும் 'எஸ் ஆர் நாதன் கௌரவ விரிவுரையின்' தொடக்க உரையை அமைச்சர் சண்முகம் ஆற்றினார்.
மத்திய கிழக்கு வட்டாரத்துக்கும் தென்கிழக்காசியாவுக்குமான தொடர்பு பன்முகமானது என்றும் அங்கு இடம்பெறும் மேம்பாடுகள் இவ்வட்டாரத்தை வலுவாகப் பாதிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
மத்திய கிழக்கு வட்டாரம் சந்திக்கும் அண்மை மேம்பாடுகள், தென்கிழக்காசியாவுடனான தொடர்புகள், அதன் விளைவுகள் போன்றவற்றை அவர் விளக்கினார்.
அந்த உரையில் தீவிரவாதத்தை மேற்கோள் காட்டினார் அமைச்சர். தென்கிழக்காசியாவில் உள்ள தீவிரவாதிகள் மத்திய கிழக்கில் இடம்பெறும் பூசல்களின் தாக்கத்தால் அங்கு சென்று தீவிரவாதக் குழுக்களில் இணைந்து பயிற்சி பெற்று மேலும் தீவிரவாத சிந்தனையைக் கொள்கின்றனர் என்றார்.
மீண்டும் திரும்பும்போது தென்கிழக்காசியாவிற்கு பெரும் அபாயத்தை விளைவிக்கின்றனர் என்று கூறிய அவர், இரண்டு வட்டாரங் களின் நெருங்கிய தொடர்பையும் மத்திய கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகளின் வலுவான தாக்கத்தைப் பற்றியும் குறிப்பிட்டார்.
இரு வட்டாரங்களின் ஆழமான பொருளாதார உறவைச் சுட்டிய அவர், மத்திய கிழக்கு நாடுகளு டனான சிங்கப்பூர் வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட $60 பில்லியனாக இருந்தது என்றும் இது ஆண்டுதோறும் 4.2% வளர்ச்சியை ஐந்தாண்டுகளாகக் கண்டுள்ளது என்றும் கூறினார்.
ஏறத்தாழ 300 மில்லியன் முஸ்லிம்கள் வசிக்கும் தென்கிழக்காசியாவிற்கும் இஸ்லாம் சமயத்தைப் பிரதான சமயமாகக் கொண்டுள்ள மத்திய கிழக்கிற்குமான சமய அடையாளமும் பின்னிப்பிணையப்பட்டது. ஐக்கிய அரபு சிற்றரசுகளின் கலாசார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ஒமர் சைஃப் ஜொபாஷ் இவ்வாண்டின் விரிவுரையை ஆற்றினார்.
சிற்றரசிற்கு சிங்கப்பூர் எப்போதும் முன்மாதிரியாகவே இருந்துவந்துள்ளது என்று கூறிய அவர், சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளதாகவும் இங்கு பலமுறை வந்துசென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். பல வழிகளில் சிங்கப்பூரைப் போன்று விளங்க முயற்சி செய்துள்ளதாகவும் சொன்ன அவர், அதற்காக சிங்கப்பூருக்கு நன்றி சொல்வதாகவும் கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு 'இளம் முஸ்லிமுக்கான கடிதங்கள்' எனும் நூலை எழுதிய திரு ஒமர், ஐக்கிய அரபு சிற்றரசுகளின் வெளியுறவுக் கொள்கைகள், உள்நாட்டு மேம்பாடுகள் குறித்து பேசினார். அவை தனது நட்பு ரீதியான வலிமையை எவ்வாறு மேம்படுத்த உள்ளது என்பது குறித்து எழுந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனத்தை மேம்படுத்தியவரான அவர், ஒரு விமானத்திலிருந்து நூற்றுக்கணக்கான நகரங்களை துபாயுடன் இணைக்கும் மாபெரும் நிறுவனமாக அது வளர்ச்சியடைந்தது குறித்து பேசினார். அதனால் அரசியல் ரீதியான எழுச்சி, சக்தி வளர்ந்துள்ளதாக அவர் கூறினார்.