மருத்துவமனை, தாதிமை இல்லங்களில் தொற்றுக் குழுமம்: நிபுணர்கள் கவலை
சிங்கப்பூரில் தடுப்பூசி விகிதம் அதிகமாக இருப்பினும், நோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் இருக்கும் இடங்களில் தொற்றுக் குழுமங்கள் ஏற்பட்டு வருவது கவலை அளிப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனைகள், தாதிமை இல்லங்கள் போன்றவை அவற்றில் அடங்கும். புதிய தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டு வரும் ஏழு பெரிய தொற்றுக் குழுமங்களில் ஆறு அத்தகைய இடங்களில் ஏற்பட்டுள்ளன.
மற்ற உலக நாடுகளிலும் இதுபோன்ற இடங்களில் தொற்றுப் பரவல் ஏற்பட்டுள்ளதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய்ப் பிரிவின் மூத்த மருத்துவ நிபுணர் பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார். இந்த இடங்களில் முகக்கவசம் அணிவது, பாதுகாப்பு இடைவெளி கடைப்பிடிப்பது போன்றவை கடினம் என்பதால் இங்கு கிருமிப் பரவல் பெருகும் என்றார் அவர்.
கிருமித்தொற்று: 10 பேர் மரணம்
செவ்வாய்க்கிழமை 26ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித் தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக பத்து முதியவர்கள் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு கூறியது.
அவர்கள் அனைவரும் 66 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். அவர்களில் ஒன்பது பேருக்கு ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.
பத்தாவது நபருக்கு, வேறு நோய்கள் இல்லாதபோதும் அவருக்குத் தடுப்பூசி போடப்படவில்லை.
இதன்படி தொடர்ந்து 37வது நாளாக சிங்கப்பூரில் கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாயின.
நேற்று முன்தின நிலவரப்படி இங்கு மொத்தம் 3,277 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. சமூகத்தில் 2,984 பேருக்கும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 288 பேருக்கும் தொற்று ஏற்பட்டது. வெளிநாடுகளி லிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் ஐந்து பேருக்கும் தொற்று உறுதியானது. உள்ளூரில் கொவிட்-19 கிருமி தொற்றியவர்களில் 471 பேர், 60 வயதைத் தாண்டிவர் ஆவர்.
வாராந்திர தொற்று வளர்ச்சி விகிதம் 1.11 எனும் அளவில் உள்ளது. சமூகத்தில் தொற்று ஏற்பட்டவர்களில் 506 பேர் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள்.
தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு: பங்களிக்கும் பிடோக் வாசிகள்
பிடோக் குடியிருப்பாளர்கள் சிலர், தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி அங்குள்ளவர்களுக்கு இலவச ஆலோ சனை வழங்கி வருகின்றனர். திருவாட்டி சாண்டி கோ சியூ ஹுவாவின் தலைமையில் ஆறு முதல் பத்து தொண்டூழியர்கள், கிருமிப் பரவல் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றியும் தடுப்பூசித் திட்டம் பற்றியும் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
முதியோர் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது இவர்களும் உடன் செல்கின்றனர்.
மேலும், பிடோக் வட்டாரத்தில் உள்ள 55 புளோக்குகளில் வசிக்கும் சுமார் 350 குடும்பங்களுக்கு இத்தொண்டூழியர்கள் உதவி வருகின்றனர். குறிப்பாக கொவிட்-19 காலத்தில் வெளியில் செல்ல முடியாதவர்களுக்கு அவர்கள் வாரம் இரண்டு முறை பொருட்களை விநியோகிக்கின்றனர். வீட்டுக்குத் தேவையான பொருட்களை உதவி அமைப்புகளிடமிருந்து இவர்கள் பெறுகின்றனர்.

