புதுப்பிக்கப்பட்ட சுவா சூ காங் பொது நூலகம் இன்று பொதுமக்களுக்குத் திறக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நூலகங்கள் எப்படி இருக்கும் என்பதை இந்நூலகம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இயற்கையுடன் மீண்டும் இணைவோம்' எனும் கருப்பொருளுடன் திறக்கப்படும் சுவா சூ காங் பொது நூலகம், நீடித்த நிலைத்தன்மையை மையமாகக்கொண்டு சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் நூலகமாகும். நூலகத்தில் உள்ளரங்குத் தோட்டம், ஹைட்ரோபொனிக்ஸ் அறை, புதிய மின்னிலக்கக் கற்றல் சாதனங்கள் ஆகிய வசதிகள் உள்ளன.
நீடித்த நிலைத்தன்மைமிக்க வாழ்க்கைமுறை, சுற்றுப்புற விவகாரங்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த அம்சங்களின் இலக்கு.
சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள 'லோட் ஒன்' கடைத்
தொகுதியின் நான்காவது, ஐந்தாவது மாடிகளில் நூலகம் அமைந்துள்ளது. ஏழாவது 'அடுத்த தலைமுறை நூலகமாக' உருவெடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன.
நூலகத்திற்குச் செல்வோர் தங்கள் கைபேசியைப் பயன்படுத்தி கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து மெய்நிகர் கற்றல் பயணத்தில் பங்கெடுக்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட நூலகத்தின் திறப்பு விழாவில் தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று கலந்துகொண்டு பேசினார்.
பொதுமக்களின் அறிவாற்றல் மேம்படவும் பல்வேறு கலாசாரங்
களைப் பற்றி அவர்கள் கற்றுக்கொள்ளவும் நூலகம் பெருமளவில் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.
"வேகமாக மாறிவரும் நமது சமுதாயத்தின், சிங்கப்பூரர்களின் தேவைகளையும் ஆர்வத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் நமது நூலகங்கள் மாறி வருகின்றன," என்று அமைச்சர் டியோ கூறினார்.
2017ஆம் ஆண்டிலிருந்து ஆறு நூலகங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

