முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டம் நவம்பரில் தொடக்கம்
முதன்மை வட்டாரத்திற்கான புதிய பொது வீடமைப்பு முறையின்கீழ் ரோச்சோரில் அடுத்த மாதம் புதிய (தேவைக்கேற்ப கட்டித்தரப்படும்) பிடிஓ திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உருவாகும் கட்டடங்களில் 960 மூவறை மற்றும் நான்கறை வீடுகள் கட்டப்படும். முதன்மை வட்டாரத்தில் எல்லாப் பிரிவினரையும் குடியமர்த்தும் முயற்சியின்கீழ் 40 ஈரறை வாடகை வீடுகளும் இங்கு அமையும்.
ஜாலான் புசார் எம்ஆர்டி நிலை யத்தை அடுத்துள்ள வெல்டு ரோடு மற்றம் கிளந்தான் ரோடு ஆகிய வற்றின் அருகே காலியாக உள்ள இரு நிலப்பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்பட இருப்பதாக தேசிய வளர்ச்சி அமைச்சும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நேற்று கூட்டாகத் தெரிவித்தன.
சிம் லிம் டவர் கட்டடத்திற்கு அருகே இருந்த திறந்தவெளி கார் நிறுத்துமிடமும் 2017 ஜூலை மாதம் சுங்காய் ரோடு அருகே காலி செய்யப்பட்ட பழைய பொருள் சந்தை இடமும் வீடுகள் கட்ட பயன்படுத்தப்பட இருக்கும் நிலப் பகுதிகள்.
வருங்காலத்தில் இந்த வீடுகளில் குடியேறுவோருக்கு பல வசதிகள் காத்திருக்கின்றன.
எம்ஆர்டி நிலையம், பெர்சே உணவு நிலையம் மற்றும் ஸ்டாம்ஃபர்ட் தொடக்கப் பள்ளி போன்றவை அவர்களின் வீட்டிலிருந்து நடக்கும் தூரத்தில் அமைந்திருக்கும். ரோச்சோர் கட்டுமானத் திட்டத்தை அடுத்து முதன்மை வட்டாரங்களிலும் அவற்றைச் சுற்றி உள்ள நகர மையத்திலும் மேலும் அதிகமான வீவக வீடுகள் படிப்படியாகக் கட்டப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புதிய வீடமைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஒரு முதன்மை வட்டாரத்திலாவது வீடமைப்புத் திட்டம் அமையும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு செய்வதன் மூலம் புதிய முன்மை வட்டார வீடுகளுக்கும் இதர வட்டார வீடுகளுக்கும் இடையிலான விகிதாசாரம் பன்மயப்படுத்தப்பட்ட வீட்டு விநியோகத்தை உறுதிசெய்யும் பொருட்டு ஆண்டுக்காண்டு வேறுபடும் என்றார் திரு லீ.
முதன்மை வட்டாரங்களுக்கான புதிய பொது வீடமைப்பு முறையின்கீழ் அமையும் வீடுகளை 10 ஆண்டு காலம் என்னும் குறைந்தபட்ச குடியிருப்பு காலத்திற்குப் பின்னரே விற்கமுடியும்.
இந்த வீட்டை வாங்குவதற்கான ஒட்டுமொத்த மாத வருமான வரம்பு $14,000.
அதேநேரம் இதர வட்டார பிடிஓ திட்ட வீடுகளுக்கான குறைந்தபட்ச குடியிருப்பு காலம் ஐந்தாண்டாக இருக்கும்.
இந்த வீடுகளை மறுவிற்பனைச் சந்தையில் வாங்குவோருக்கு வருமான வரம்பு ஏதுமில்லை.