மின்னிலக்க உருமாற்றம், பொதுச் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைக்க பிரதமர் லீ யோசனை
ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட உறவுக்கான ஒருங் கிணைப்பாளர் என்ற முறையில், மின்னிலக்க உருமாற்றம், பொதுச் சுகாதார ஒத்துழைப்பு ஆகிய இரு துறைகளுக்கும் முன்னுரிமை தர சிங்கப்பூர் உறுதிபூண்டு இருப்பதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார்.
இந்த வட்டார நாடுகளின் தலைவர்களுடன் கூடிய மெய்நிகர் மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று பிரதமர் உரையாற்றினார்.
ஆசியான் அமைப்பு, இந்தியாவின் துடிப்புமிக்க தொழில்நுட்பத் துறையையும் புதிதாக நிறுவனங்களைத் தொடங்குவதற்கான ஆதரவு சூழல்களையும் பயன்படுத்திக்கொண்டு நடைமுறைக்கு உகந்த வழிகளில் வளர்ச்சி காண முடியும் என்றும் நிதி மற்றும் வர்த்தக துறைகளில் அனுகூலங்களைப் பெற முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பலரையும் உள்ளடக்கக்கூடிய, சேர்ந்து செயல்படக்கூடிய மின்னிலக்க, நிதித் துறை ஏற்பாட்டு முறைகளை உருவாக்குவதில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் திரு லீ தெரிவித்தார். இரண்டு தரப்புகளைச் சேர்ந்த சமூகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதிக வாய்ப்பு வசதிகள் இதனால் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
ஆசியான்-இந்தியா உச்சநிலை மாநாட்டில் பல நாடுகளின் பிரதமர்கள் கலந்துகொண்டனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் மாநாட்டில் பங்கெடுத்துக்கொண்டார்.
அவர்களிடம் உரையாற்றிய திரு லீ, உலகின் மருந்து விநியோக ஏற்பாட்டில் இந்தியா மிக முக்கியமான பங்காற்றி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
அந்த மருந்துகளை தென்கிழக்கு ஆசியாவிற்கும் அதற்கு அப்பாலும் கொண்டு செல்வதற்கு ஆதரவு அளிக்கும் ஆற்றல்மிகு விமானம், கப்பல் போக்குவரத்து மையமாக சிங்கப்பூர் திகழ முடியும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுகள் ஏற்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையில் 2022ஆம் ஆண்டு ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 'தோழமை ஆண்டாக' கடைப்பிடிக்கப்படும் என்று திரு லீ தெரிவித்தார்.
இதனிடையே, ஆசியான் நாடுகளையும் அதன் எட்டு பங்காளி நாடுகளையும் உள்ளடக்கிய கிழக்கு ஆசிய உச்சநிலை மாநாட்டில் புதன்கிழமை பேசிய இந்திய பிரதமர் மோடி, சுதந்திரமான, திறந்த, எல்லாரையும் உள்ளடக்கிய ஒரு வட்டாரமாக இந்தோ-பசிஃபிக் திகழ்வதில் இந்தியா ஒருமித்த கவனம் செலுத்தும் என்று மீண்டும் உறுதிபட கூறினார்.
இந்தியா-ஆசியான் தோழமை உறவிற்கு கொவிட்-19 ஒரு சோதனை என்று திரு மோடி சுட்டிக்காட்டினார்.
சவால்மிக்க இந்தக் காலகட்டத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடைப்பட்ட பரஸ்பர ஒத்துழைப்பு, இரு தரப்பு மக்களுக்கு இடையில் நல்லெண்ணம் ஏற்படுவதற்கான அடிப்படையாகத் திகழ்வதாக திரு மோடி குறிப்பிட்டார்.
அறிவார்ந்த நகர்கள், இயற்கைவள மேம்பாடு, இணையப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆசியானும் இந்தியாவும் தொடர்ந்து அதிகப்படுத்தி வரவேண்டும் என்று பிரதமர் திரு லீ தெரிவித்தார்.
கடல் தூய்மைக்கேடு, சட்டவிரோத மீன்பிடிப்பு ஆகியவற்றை ஒடுக்குவதன் தொடர்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுடன் கூடிய இரண்டு பயிலரங்கு களுக்கு சிங்கப்பூர் கூட்டாக ஏற்பாடு செய்யும் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
மியன்மாரில் அமைதி ஏற்பட ஆசியான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் திரு லீ நம்பிக்கை தெரிவித்தார்.

