வளர்ச்சிக்கான தேவைகளுடன் கூடிய சிறார்களுக்கான ஒரு முன்னோடி செயல்திட்டத்தை ஏழு பாலர்பள்ளிகள் தொடங்க உள்ளன.
'எல்லாரையும் உள்ளடக்கும் ஆதரவு செயல்திட்டம்' என்ற அந்தத் திட்டம் 2022 ஜூன் மாத வாக்கில் தீவு முழுவதும் உள்ள அந்த ஏழு பாலர்பள்ளிகளில் நடப்புக்கு வரும். அதை சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நேற்று செங்காங்கில் ஒரு பாலர்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இதர ஆறு பாலர்பள்ளிகளும் அடுத்த ஆண்டில் அந்தத் திட்டத்தைத் தொடங்கும்.
மூன்று முதல் ஆறு வரை வயதுள்ள குறிப்பிட்ட அளவுக்கு உதவிகள் தேவைப்படுகின்ற சிறார்களுக்கு உதவுவது இதன் நோக்கம் என்று அமைச்சர் கூறினார்.
இத்தகைய சிறார்களில் பெரும்பாலானவர்கள் இப்போது தாங்கள் படிக்கும் பாலர்பள்ளிகளில் அல்லாமல் ஆரம்பகால தலையீட்டு நிலையங்களில் தேவையான ஆதரவைப் பெறுகிறார்கள்.
அங்குமிங்கும் அலைய வேண்டி இருப்பதால் இதனால் குடும்பங்களுக்கும் சிறார்களுக்கும் சிரமங்கள் ஏற்படுவதாக திருவாட்டி சுன் தெரிவித்தார். இதர சிறார்களுடன் சேர்ந்து பயிலும்போது மிக முக்கிய சமூகத் தேர்ச்சிகளை இத்தகைய சிறார்கள் கற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்
முன்னோடித் திட்டம் மூன்றாண்டு காலத்திற்குச் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.