குடிபோதையில் முன்னாள் மனைவியை அறைந்தவருக்கு நேற்று சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் ஊழியரான அபு பக்கர் அப்துல் கரீம், 57, குடிபோதையில் உணவங்காடி நிலையத்திலும் தகராறு செய்துள்ளார்.
பொது இடத்தில் மது அருந்தியது உட்பட தம் மீது சுமத்தப்பட்ட எட்டுக் குற்றச்சாட்டுகளை அபு பக்கர் கரீம் நேற்று நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
அவருக்கு 12 வாரச் சிறை தண்டனையும் 3,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
குடிபோதையில் பொதுப் பேருந்துக்கு சேதம் ஏற்படுத்தியதற்கும் போலிஸ் கார் மீது ஏறி படம் பிடித்ததற்கும் சேர்த்து அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பேசிய அரசாங்க வழக்கறிஞர் பிரையோண்ட் சின், பிணையில் உள்ள அபு, ஏப்ரல் 6ஆம் தேதி வீட்டில் குடித்த பிறகு மனைவியை புளோக்கின் கீழே உள்ள காலியிடத்துக்கு பேச வருமாறு அழைத்ததாக தெரிவித்த தார். அவர் ஏன் பிணையில் இருக்கிறார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அவரது முன்னாள் மனைவியும் சகோதரியுடன் அங்கு வந்துள்ளார். அப்போது மகனைப் பார்க்க நீ வருவதில்லை என்று கூறி அவர் சண்டையிட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு மனைவியை அவர் அறைந்துள்ளார். அவரது முன்னாள் மனைவி ஏற்கெனவே தனிநபர் பாதுகாப்பு உத்தரவைப் ெபற்றிருந்தார். ஆனால் அதை அபு பக்கர் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இதனால் மனைவியின் சகோதரி போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
மறுநாளே மாலை ஆறு மணி அளவில் வேலையை முடித்த பிறகு கரீம், சர்க்கிட் ரோட்டில் உள்ள உணவங்காடி நிலையத்துக்குச் சென்று 'வோட்கா' குடித்துள்ளார்.
பின்னர் அங்கு இருந்த ஊழியருடன் அவர் தகராறு செய்துள்ளார். இதனால் அங்கு வரவழைக்கப்பட்ட போலிசார் அவரை கைது செய்தனர்.
கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி நடந்த சம்பவத்திலும் அவர் தகராறு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடித்துவிட்டு போலிஸ் கார் மீது ஏறி புகைப்படம் எடுத்தார்.
இவை அனைத்தையும் அவருக்குத் தண்டனை விதிக்கும்போது நீதிபதி கவனத்தில் எடுத்துக்கொண்டார்.

