சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவமனை ஊழியர் கொள்ளளவு வரும் திங்கட்கிழமை கூடும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் முக்கிய அம்சமாகத் திகழும்.
இது பற்றி குறைந்தது பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புவர். அன்றாட தொற்று எண்ணிக்கை தொடர்ந்து 3,000ஐ கடந்து வரும் வேளையில் கடந்த புதன்கிழமை தொற்று எண்ணிக்கை 5,324ஐ எட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுகாதார அமைச்சின் சார்பில் ஓர் அமைச்சர்நிலை அறிக்கை திங்கட்கிழமையன்று தாக்கல் செய்யப்படும்.
அன்றாட தொற்று எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 5,000ஐ தாண்டியது குறித்து அன்றைய தினம் கருத்துரைத்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், "பன்மடங்கு அதிகரித்துள்ள தொற்று எண்ணிக்கை பொது மருத்துவமனைகளில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.
"1,650 தனிமைப்படுத்தும் படுக்கைகளில் 89 விழுக்காடும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 67 விழுக்காடும் நிரப்பப்பட்டு விட்டன," என்றார்.
தற்போது கொவிட்-19 நோயாளிகளுக்கு 200 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள்தான் உள்ளன. அவர்கள் சராசரியாக 15 நாட்கள் அப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். ஆக அதிகமாக அவர்கள் ஒரு மாதம் அங்கிருக்கின்றனர் என்றார் அமைச்சர்.
இயோ சூ காங் தொகுதி உறுப்பினர் யிப் ஹோன் வெங், மனிதவளப் பற்றாக்குறை, ஊழியர்களின் நல்வாழ்வு ஆகியவை பற்றி கேட்பார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி உறுப்பினர் ஜெசிக்கா டான், கொவிட்-19 தொடர்பிலான கடுமையான நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வழிகள் பற்றி கேள்வி எழுப்புவார்.

