பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு நாட்டமுள்ள, அவர்களின் கற்றல் திறமைக்கு ஏற்ற உயர்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.
தங்கள் பிள்ளையின் கல்வி கற்கும் ஆற்றலைப் புறந்தள்ளிவிட்டு, பிரபலமான பள்ளிக்கூடங்கள்தான் தேவை என்று முடிவு செய்தால் சாதகத்தைவிட பாதகம்தான் அதிகமாக இருக்கும் என்று ராஃபிள்ஸ் பள்ளி முதல்வர் ஃபெட்ரிக் இயோ குறிப்பிட்டார்.
எந்தப் பள்ளியைத் தேர்ந்தெடுப்பது என்பதன் தொடர்பில் பிள்ளை களுடன் பெற்றோர் பேச வேண்டும்.
படிக்கப் போகும் பிள்ளையின் விருப்பத்தைப் பொறுத்தே பள்ளிக்கூடங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பெற்றோர் விரும்பும் பள்ளிக்கூடமாக அது இருக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விவேக பெற்றோர் இணையக் கருத்தரங்கு நேற்று நடந்தது. அதில் 10 பள்ளி முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
அவர்கள் பெற்றோர்களுக்குப் பற்பல யோசனைகளைத் தெரிவித்தனர். பெற்றோர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர்கள் விளக்கம் அளித்தனர்.
வழக்கநிலை (தொழில் கல்வி), வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), விரைவு நிலை தரம் பிரிப்புக்குப் பதிலாக முற்றிலும் பாடங்களை அடிப்படையாகக்கொண்ட ஓர் ஏற்பாடு நடப்புக்கு வரும் என்று 2019ல் கல்வி அமைச்சு அறிவித்தது.
புதிய ஏற்பாட்டின்படி தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்ப மாணவர்கள் உயர்நிலையில் அல்லது கீழ்நிலையில் பாடங்களைப் படிப்பார்கள்.

