கேலாங் சிராய் சந்தை இன்று தொடங்கி புதன்கிழமை வரை மூடப்பட்டிருக்கும். கடந்த ஏழு நாட்களாக அங்கு கொவிட்-19 சம்பவங்கள் கண்டறியப்பட்டதால் இவ்வாறு மூடப்படுவதாகக் கூறப்பட்டது.
நன்கு சுத்தம் செய்து கிருமி நீக்கும் பணிகளை வளாகத்தில் மேற்கொள்ள இருப்பதால் சந்தை மூடப்பட்டிருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியத்தின் துண்டுப் பிரசுரங்கள் சந்தையில் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன.
இருப்பினும், மூடப்படுவதற்குக் காரணம் என்ன என்பது பிரசுரத்தில் குறிப்பிடப்படவில்லை.
வாடஸ்அப் செயலியில் வலம்வரும் தகவல் ஒன்றின்படி, கொவிட்-19 சம்பவங்கள் அவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் சந்தை இவ்வாறு மூடப்படுவது குறித்து சனிக்கிழமை முதல் தகவல் வலம் வரத்தொடங்கியதை அடுத்து, சந்தையில் கடை வைத்திருப்போர் திக்குமுக்காடிப் போயினர்.
பின்னர், சந்தை மூடப்படுவதை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகள் நேற்று காலை உறுதிப்படுத்திவிட்டனர்.
மூன்றாம் தலைமுறையாக இறைச்சி விற்கும் வியாபாரத்தில் உள்ள முகம்மது ஷாஹித், 32, விழாக்காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகக் கூறினார்.
வியாழக்கிழமையன்று தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் இந்துக்கள் பலரும் சந்தைக்கு வருவர் என்றும் இதனால் தங்களின் வியாபாரம் அமோகமாக இருக்கும் என்றும் கடைக்காரர்கள் நினைத்திருந்தனர்.
திரு ஷாஹித் போல சந்தையில் இறைச்சி வியாபாரம் வைத்திருக்கும் பல கடைக்காரர்கள், இந்து வாடிக்கையாளர்களின் வருகைக்காக காத்திருந்ததாகக் கூறப்பட்டது.
இவ்வாறு விழாக்காலத்தில் சந்தை மூடப்படுவது குறித்துக் கடைக்காரர்கள் பலர் புலம்புகின்றனர் என்று திரு ஷாஹித் கூறினார்.
சந்தைக்குள் வருவதற்காக வாடிக்கையாளர்கள் பலர் நேற்றுக் காலை நீண்ட வரிசையில் காணப்பட்டனர்.
இருப்பினும், சந்தை பிற்பகல் 1 மணிக்குள் ஆள் நடமாட்டமே இல்லாது காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடியும் விட்டன.
இதன் தொடர்பில் தேசிய சுற்றுப்புற வாரியமும் சுகாதார அமைச்சும் அறிக்கை வெளியிடும் என்று நேற்றிரவு நிலவரப்படி அறியப்பட்டது.

