கொவிட்-19 தொடர்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் வாய்ப்பு, பிடிபடும் அபாயம் உள்ள நிலையிலும் சிலர் இரவு 10.30 மணிக்கு மேல் தங்களின் சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) விதிமுறைகள் 2020 நடைமுறைப்படி, 10.30 மணிக்கு மேல் மது அருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது.
ஒரு சில காப்பிக் கடைகளும் உணவகங்களும் இரவில் மூடிய பிறகு மது அருந்தும் தங்களின் வாடிக்கையாளர்களுக்காக இயங்குகின்றன.
இவ்வாறு இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்துதல் தொடர்பான தடையை மீறுவோருக்கு $1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
மீண்டும் குற்றம் புரிவோருக்கு $2,000 வரை அபராதம், அல்லது மூன்று மாதம் வரை சிறைத் தண்டனை, அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
மது அருந்தக்கூடிய கடைகளில் கூடும் வாடிக்கையாளர் கூட்டத்தைக் கலைப்பது எளிதான காரியம் அல்ல என்று பணியாளர்கள் சிலர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இரவு 10.30 மணிக்கு மேல் மது அருந்துதலுக்குத் தடை உள்ளதுடன், தற்போது அமர்ந்து சாப்பிடுவதற்குத் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது. சமூக ஒன்றுகூடல்களிலும் இருவர்தான் கலந்துகொள்ளலாம்.
இதற்கிடையே கடந்த மாதம் இரண்டு சனிக்கிழமைகளில் சிலேத்தார் நார்த் லிங்க் பாலத்தில் கிட்டத்தட்ட 40 பேர் கூட்டம் கூட்டமாக அமர்ந்தபடி மது அருந்திக்கொண்டு இருந்தனர்.
வெளிநாட்டு ஊழியர்கள் என்று நம்பப்படும் இவர்கள், நள்ளிரவுவரை மது அருந்தியபடி இருந்தனர். போலிஸ் அதிகாரி வந்து எச்சரித்த பின்னர் தங்களின் தங்குவிடுதிக்குத் திரும்பினர்.

