மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு உள்ள நிலையிலும் ஆண்டுக்குச் சுமார் 2,000 கொவிட்-19 மரணங்களை சிங்கப்பூர் சந்திக்க நேரிடலாம். அவ்வாறு இறப்பவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்களாகவும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்ப்பரவல் கொள்ளைநோயாக மாறுவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் தனது பங்குக்கு அதிகத் தடுப்பூசி விகிதம், பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசிகள், மிதமான தொற்றுக்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துதல் ஆகிய உத்திகளைக் கலந்து கையாளுகிறது என்றார் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.
"சிங்கப்பூரின் கொவிட்-19 மரண எண்ணிக்கை விகிதம் உலக அளவில் 0.2% ஆகும். மற்ற நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு முன் தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானபோது, அந்நாடுகளில் மரண எண்ணிக்கை 3% அல்லது அதற்கு மேல் இருந்தது. அதை ஒப்பிட்டுப் பார்க்கையில் சிங்கப்பூரின் விகிதம் ஆகக் குறைவானது.
"இந்த 0.2% விகிதம் நிமோனியா விகிதத்துக்கு ஒப்பானது," என்று டாக்டர் ஜனில் நேற்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
"இந்தப் பெருந்தொற்றுக்கு முன் பொதுவாக ஆண்டுக்கு 4,000 நோயாளிகள் சளிக்காய்ச்சல், நிமோனியா கிருமி, இதர சுவாசப் பிரச்சினைகள் காரணமாக மரணமடைந்தார்கள்.
"போதுமான மருத்துவப் பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகக் கூடுதலான மரணங்கள் ஏற்படும் சூழ்நிலையைத் தடுக்க சிங்கப்பூர் கடுமையாகப் போராடி வருகிறது.
"இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், கொவிட்-19 தொடர்பான மரணங்களை நாம் சந்தித்துக்கொண்டிருந்தாலும் பொதுவாக கொவிட் அல்லாத ஆண்டுகளில் நிகழும் மரணங்களைவிட நாம் இப்போது அதிகமாகப் பார்க்க மாட்டோம்.
"தற்போதைய இந்த நிலைக்கு வர மற்ற உலக நாடுகள், மரண எண்ணிக்கையின் அடிப்படையில் மிக அதிகமான விலை கொடுத்துள்ளன," என்றார் அமைச்சர்.
"கொவிட்-19 பெருந்தொற்றுடன் சிங்கப்பூர் வாழ்கிறது என்று கூறினாலும், நமது வர்த்தகங்களையும் எல்லைகளையும் உடனே திறந்துவிட முடியாது. அதனால் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயமுண்டு.
"நாளுக்கு நாள் அதிகமான கொவிட்-19 சம்பவங்கள் ஏற்படுவது, மருத்துவமனைகளில் மேலும் அதிகமான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் நிரப்பப்படுகின்றன என்பதற்கு சமமாகும்.
"இதுநாள்வரை கொவிட்-19 தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது, தொற்றால் பாதிக்கப்பட்டோரை நன்கு கவனித்துக்கொள்வது ஆகியவற்றின் மூலம் சிங்கப்பூரின் மரண எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது," என்றும் டாக்டர் ஜனில் விவரித்தார்.
கொவிட் பெருந்தொற்றுடன் வாழ வேண்டும் எனும் சூழ்நிலை ஒருபுறம் இருக்க, தடுப்பூசி போடுதல், பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் மூலம் மக்களைக் காத்தல் ஆகியவை தொடரும். ஆனால், இந்தப் பாதுகாப்பு முழுமையானதல்ல. அதனால்தான் அதிகமானோர் தொற்றுக்கு ஆளாகின்றனர் என்றார் அமைச்சர்.
"நாளடைவில் மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு இருந்தாலும் சிங்கப்பூர் ஆண்டுக்கு சுமார் 2,000 கொவிட்-19 மரணங்களைச் சந்திக்க நேரிடலாம். கொவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களாலும் மருத்துவமனைகளாலும் முறையான மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படுவதையும் அவர்கள் இந்த நோய்க்கு எதிராக சிறந்த முறையில் போராட வாய்ப்பளிப்பதையும் நாம் அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.
"தற்போதைய நிலைமை நிரந்தரமாகாது. நாம் ஒருநாள் இதிலிருந்து மீண்டு வருவோம். விரைவில் நம்மில் மிக அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருப்பார்கள். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் மிக விரைவில் குணமடைவார்கள்," என்றார் திரு ஜனில்.
ஆனால், அந்த நிலைமையை அடைய கொவிட் தொடர்பான மரணங்களை மிகக் குறைந்த அளவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார் அவர்.