தீபாவளித் திருநாளையொட்டி சிராங்கூன் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சாலையைப் பயன்படுத்துபவர்கள் மாற்று வழிகளுக்குத் திட்டமிடுமாறும் எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லிட்டில் இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடர்பில் போலிசார் விடுத்துள்ள ஆலோசனைக் குறிப்பில், பாதிக்கப்பட்ட சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த துணை போலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வாகன நிறுத்தத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலிஸ் எச்சரித்துள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் குற்றங்கள் நடைபெறக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகமான நகைகள் அணிந்து செல்வதையும் தேவைக்கு மிகுந்த பணம் எடுத்துச் செல்வதையும் தவிர்க்குமாறும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
“சந்தேகத்திற்குரிய, குற்ற நடவடிக்கைகளைச் சந்திக்க நேர்ந்தால் உடனடியாக 999 என்ற எண்ணை அழைக்கவேண்டும்.
“மத்தாப்புகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வெடிமருந்துக் கருவிகள் ஆபத்தா னவை. தீச் சம்பவத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்துவோருக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை, அதிகபட்சமாக $5,000 அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
இச்சம்பவம் மூலம் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் குற்றவாளிகளுக்கு ஏழாண்டு வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் போலிசாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தீபாவளியையொட்டி லிட்டில் இந்தியாவில் அதிக வருகையாளர்கள் எதிர்பார்க்கப் படுவதையொட்டி புதிய பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து போலிசின் ஆலோசனையும் எச்சரிக்கையும் வந்துள்ளது.