மார்சிலிங் லேனில் இருக்கும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தன் மூத்த புதல்வியைத் திரும்பத் திரும்ப கத்தியால் குத்திய 65 வயது ஆடவர், அந்தப் புதல்வி மரணமடையவில்லை என்பது தெரிந்ததும் திரும்பி வந்து மீண்டும் குத்தினார்.
மனைவியை இழந்த ஷூ ஆ சான் என்ற அந்த மலேசிய லாரி ஓட்டுநர், திருவாட்டி ஷூ சுயட் லியன், 42, என்ற தனது மூத்த புதல்வியை மார்பு, வயிறு, முதுகு, தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் மொத்தம் 17 தடவை குத்தினார்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த மாதுக்கு நுரையீரல்கள் பாதிக்கப்பட்டுவிட்டன. இருந்தாலும் அவர் உயிர்பிழைத்துவிட்டார்.
இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு நிகழ்ந்தது.
கொலை செய்ய முயன்றதாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் நேற்று உயர் நீதிமன்றத்தில் ஷு குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பொது இடத்தில் ஆபத்தான ஆயுதம் ஒன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் இரண்டாவது குற்றச்சாட்டு, தண்டனை விதிக்கப்படும் போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.
ஷூவுக்கு வரும் வெள்ளிக்கிழமை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஷூவுக்கு மூன்று புதல்விகள், இரண்டு புதல்வர்கள். பிள்ளை களோடு ஷூ அவ்வளவு பாசத்தோடு இல்லை என்று நீதிமன்றத் தில் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாருவில் இருக்கும் ஒரு வீடு யாருக்கு சொந்தம் என்பதன் தொடர்பில் பிள்ளைகளுக்கும் அவருக்கும் இடையே பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த வீட்டை வாங்க தான் பணம் கொடுத்ததாக ஷூ கூறினார். இருந்தாலும் அவருடைய மூத்த மகன் சீ செங் தந்தைக்குப் பணம் கொடுத்ததாகவும் கடனை மகன் அடைத்து வந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2007ல் அந்த வீட்டைவிட்டு வெளியேறிய ஷூ மலாக்கா சென்று வேலை பார்த்தார். அப்போதைக்கு அப்போது வீட்டுக்கு அவர் திரும்பி வருவார்.
இதற்கிடையே வீட்டை புதுப்பித்து விற்க முயற்சிக்கப்ப டுவதாக ஷூ நம்பினார். இதற்கு மூத்த மகளே காரணம் என்று நினைத்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை மோட்டார்சைக்கிளில் சிங்கப்பூர் வந்த அவர், திருவாட்டி ஷூ வசித்து வந்த மார்சிலிங் லேன் பகுதிக்குச் சென்று எப்படியும் தன் மகள் வேலைக்குச் செல்ல வெளியே வருவார் என்று காத்திருந்தார்.
அதிகாலை சுமார் 5 மணிக்கு ஒரு பேருந்து நிலையத்தை நோக்கி திருவாட்டி ஷூ நடந்து சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து சென்று பல தடவை மகளைக் கத்தியால் குத்திவிட்டு தன் மோட்டார்சைக்கிளை நோக்கி ஓடினார். அப்போது திருவாட்டி ஷூ சுயட் லியன் உதவிக்கு சத்தம் போட்டார். தன் புதல்வி புல் தரையில் அமர்ந்து இருந்ததைக் கண்ட ஷூ, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி ஓடிவந்து, 'நீ இன்னமுமா சாகவில்லை' என்று கேட்டு திருவாட்டி ஷூவை மீண்டும் குத்திவிட்டு மோட்டார்சைக்கிளில் ஓடிவிட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

