பெரியவர்கள் பயணம் செய்ய 3 முதல் 4 காசு வரை கட்டணம் அதிகரிக்கும்
சிங்கப்பூரில் பேருந்து, ரயில் கட்டணங்கள் டிசம்பர் 26ல் இருந்து 2.2 விழுக்காடு கூடுகிறது. பொதுப் போக்குவரத்து மன்றம் நேற்று இதனை அறிவித்தது.
அதாவது பயண அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பெரியவர்களுக்கான கட்டணம் 3 முதல் 4 காசு கூடும். முதியவர்கள், மாணவர்கள், உடற்குறையாளர்கள், குறைந்த வருமான ஊழியருக்கான சலுகைக் கட்டணம் 1 காசு அதிகரிக்கும்.
ரொக்கம் செலுத்தி பயணம் செய்வது, ஒரு வழிப் பயணச்சீட்டுகள், மாதாந்திர சலுகை மற்றும் பயண அட்டைகளுக்கான கட்டணத்தில் மாற்றம் இருக்காது என்றும் மன்றம் தெரிவித்தது.
எடுத்துக்காட்டாக, செங்காங்கில் இருந்து ராஃபிள்ஸ் பிளேசுக்கு 14.2 கி.மீ. செல்ல பெரியவர்களுக் கான கட்டணம் 3 காசு கூடும்.
14.2 கி.மீட்டருக்கும் அதிக தொலைவு பயணம் மேற்கொள்ளும் பெரியவர்களுக்கான கட்டணம் 4 காசு அதிகரிக்கும்.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரர்கள் சிரமமான பொருளியல் சூழ்நிலையை எதிர்நோக்குகிறார்கள் என்றாலும் இந்த ஆண்டு தனது கட்டண மறுபரிசீலனையில் மிக முக்கியமான ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டி இருந்ததாக இந்த மன்றம் தெரிவித்தது.
அதாவது, சென்ற ஆண்டு பொதுப் போக்குவரத்தில் மக்கள் பயணம் செய்தது, கொவிட்-19க்கு முன்பு இருந்த அளவில் 25 விழுக்காடு அளவுக்கு மிகவும் குறைந்துவிட்டது என்பதை அது சுட்டிக்காட்டியது.
கட்டண உயர்வைத் தள்ளிப் போட முடியாது என்பதைப் பயணிகள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அந்த மன்றத்தின் தலைவர் ரிச்சர்ட் மேக்னஸ் கேட்டுக்கொண்டார். குறைந்த அளவிலான கட்டண வருவாய், அதிக அளவிலான நடைமுறைச் செலவுகள் இருந்தால் நீண்டகாலத்திற்கு நீடிக்க இயலாது என்றார் அவர்.
இதனிடையே, இந்த ஆண்டு மேலும் பல குடும்பங்கள் பொதுப் போக்குவரத்து பற்றுச்சீட்டுகளைப் பெறும் என்று போக்குவரத்து அமைச்சும் மக்கள் கழகமும் நேற்று தெரிவித்தன.
ஒருவரின் மாத வருமானம் $1,600 அல்லது அதற்கும் குறைவாக உள்ள குடும்பங்கள், அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பெற இந்த ஆண்டு தகுதி பெறும்.
அந்தப் பற்றுச்சீட்டுகள் மூலம் அவர்கள் தங்கள் கட்டண அட்டைகளில் பணம் ஏற்றிக் கொள்ளலாம். அல்லது மாதச் சலுகை அட்டைகளை வாங்கலாம்.