ப. பாலசுப்பிரமணியம்
பத்தாண்டுகளாகத் தாதியாக இருக்கும் 42 வயது தாதி கோ.கவிதா, தொழிலில் பல சங்கடமான நிகழ்வுகளைப் பார்த்தவர்.
கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கிய நேரத்தில் ஃபேரர் பார்க் மருத்துவமனையில் தாதியாக இருந்தவர், அருகிலிருக்கும் ஹோட்டலில் தங்கியிருந்த கிருமி தொற்றியவர்களுக்கு பராமரிப்பு வழங்கும் முன்னிலை ஊழியராக ஆறு மாதம் சேவை ஆற்றினார்.
ஆகஸ்ட் மாதம் முதல் அலெக்சாண்டிரா மருத்துவமனை பொது மருந்தகப் பிரிவில் மூத்தோரைக் கவனிக்கும் மூத்த தாதியாகப் பணிபுரியும் திருவாட்டி கவிதா, கொவிட்-19 தொற்றிலிருந்து மீண்டவர்.
தொற்று ஏற்பட்டிருந்த காலத்தில் மனதைத் திடமாக வைத்திருக்க முன்களப் பணியாளராக அவர் பணிபுரிந்தது கைகொடுத்தது போல, தொற்று ஏற்பட்ட நேரடி அனுபவம், மற்ற நோயாளிகளுக்கு ஆறுதல்தர அவருக்கு உதவுகிறது.
அந்நேரம் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் உயிர் மருத்துவத் துறையில் பட்டயக்கல்வியை முடித்த மகள் வைதீஸ்வரி சந்திகா, மேற்படிப்புக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் பயில்வது குறித்து ஆராய, மகள் வைதீஸ்வரியுடன் சென்னைக்கு சென்றிருந்தார் கவிதா. சிங்கப்பூருக்கு அக்டோபர் 12ஆம் தேதி திரும்பியபோது, 14 நாட்கள் உள்ளூர் ஹோட்டலில் இவர்கள் கிருமித்தொற்றுத் தடைக்காப்பு நிபந்தனையை பூர்த்திசெய்ய வேண்டியிருந்தது. ஹோட்டலில் தங்கியிருந்த 13வது நாளன்று கிருமிப் பரிசோதனையில் இரு வருக்கும் தொற்று உறுதியானது.
"தீபாவளி நேரம் பார்த்து கொவிட்-19 தொற்றிவிட்டதே என்ற வருத்தம் இருந்தாலும் குணமடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம்," என்று கூறினார் தாதி கவிதா.
"இது நம்மை மட்டும் பாதிக்கவில்லை, உலகில் பலரையும் பாதித்துள்ளது, மீண்டு வருவதில் கவனம் செலுத்துவோம் என்ற நேர்மறையான சிந்தினைக்கு எங்களைப் பக்குவப் படுத்திக்கொண்டோம்," என்று நினைவுகூர்ந்தார் 23 வயது வைதீஸ்வரி.
அந்நாள் இரவே தாயும் மகளும் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேல் சிகிச்சை பெற்றனர்.
கடந்தாண்டு தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வைதீஸ்வரி வீடு திரும்பினார். அதற்கு மறுநாள் தாயார் கவிதாவும் வீடு திரும்பியதால் அனைவருக்கும் மன நிம்மதி.
நிச்சயமற்ற சூழலைக் கடந்து, உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 14 வயது மகன் வைதேஷ்சரத்துடன் சேர்ந்து குடும்பமாக தீபாவளியைக் கொண்டாட முடிந்தது, மனதிற்கு இதமாக இருந்தது.
"தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை சென்னையில் வாங்கிவிட்டோம். வீட்டில் எல்லோரும் சேர்ந்து பலகாரம் செய்யமுடியாமல் போனதுதான் ஒரு சிறு குறை. 'ரோலர்-கோஸ்டர்' போன்று மேலும் கீழும் அல்லாடிய மனதை நிலைப்படுத்தும் விதமாக கடந்தாண்டின் தீபாவளி கொண்டாட்டம் அமைந்தது," என்றார் கவிதா.
வைதீஸ்வரி இம்மாத இறுதியில், மருத்துவப் பட்டப்படிப்புக்காக ஐரோப்பா செல்லவிருக்கிறார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய இவ்வாண்டு பிப்ரவரி மாதம் அவருடன் ஐரோப்பா சென்றிருந்தார் கவிதா.
இவ்வாண்டு தீபாவளி, வழக்கம் போல பலவகைப் பலகாரங்களை வீட்டில் தயாரிக்கவும் ஒன்றாக தீபாவளி ஆடைகளை வாங்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
"கொவிட்-19 நிரந்தரமாக இங்கு இருக்கப்போவதில்லை. அதனால் அதை நினைத்து மனச்சோர்வு அடையவேண்டாம் என்று மருத்துவமனைக்கு வரும் முதியவர்களுக்குச் சொல்வேன். கொவிட்-19 கிருமி நம்மிடையே இருந்தாலும், வாழ்க்கைப் பயணம் தொடரத்தான் வேண்டும்," எனக் குறிப்பிட்டார் இதுவும் கடந்து போகும் என கருதும் தாதி கவிதா.