சிங்கப்பூரின் சில்லறை வர்த்தகம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கடந்த செப்டம்பரில் எதிர்பார்க்கப்பட்டதைவிட வலுவாக மீட்சி அடைந்தது.
புதிய கைபேசிகள் சந்தைக்கு வந்ததும் பெரும்பாலான தொழில்துறைகள் மேம்பட்ட நிலைக்குத் திரும்பியதும் அதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், செப்டம்பரில் சில்லறை வர்த்தகம் 6.6% அதிகரித்தது. அந்த வர்த்தகம் கடந்த ஆகஸ்ட்டில் 2.8% சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் புள்ளிவிவரத் துறை வெளியிட்ட தகவல்கள் மூலம் இவை தெரியவந்தன.
கடுமையான கொவிட்-19 நடவடிக்கைகள் நடப்பில் இருந்த சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், ஆகஸ்ட்டிற்கு முந்தைய ஆறு மாத காலத்தில் சில்லறை வர்த்தகம் ஏறுமுகமாக இருந்து வந்தது. அதையடுத்து ஆகஸ்ட்டில் சில்லறை வர்த்தகம் குறைந்தது.
புளூம்பெர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள், செப்டம்பரில் சில்லறை வர்த்தகம் 2.2%தான் கூடும் என்று கணித்து இருந்தார்கள். ஆனால் நிலவரம் அதற்கும் மேலாக மேம்பட்டது.
சில்லறை வர்த்தகத் தொழில் துறையில் தொலைத் தொடர்பு சாதனத் துறை விற்பனைதான் ஆக அதிக வளர்ச்சி கண்டது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அது 66.1% கூடியது.
புதிய கைபேசிகள் வெளியிடப்பட்டது இதற்கான முக்கிய காரணமாக இருந்தது.
நகைகளுக்கான தேவை அதிகமாக இருந்தது. பெட்ரோல் விலை அதிகமாகியது. இவை காரணமாக பெட்ரோல் நிலையம், கடிகாரங்கள், நகை தொழில்துறையில் விற்பனை அதிகரித்தது.
மோட்டார் வாகனங்களைச் சேர்க்காமல், மொத்த சில்லறை வர்த்தகம் 8.3% மேம்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. செப்டம்பரில் மொத்த சில்லறை வர்த்தகத்தின் மதிப்பு $3.4 பில்லியனாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அதில் ஏறக்குறைய 15.2% இணையம் வழி நடந்த வர்த்தகம்.
இணையம் வழி வர்த்தகமும் ஆகஸ்ட் அளவைவிட (14.1%) செப்டம்பரில் அதிகம். இணையம் வழி நடந்த வர்த்தகத்தில் 53.7%, கணினிகள், தொலைத்தொடர்புச் சாதனங்களாக இருந்தன.
ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் உணவு, பானத் துறை சில்லறை வர்த்தகம் செப்டம்பரில் 4.4% அதிகரித்தது.
இந்தத் துறையின் மொத்த வர்த்தக மதிப்பு செப்டம்பரில் $669 மில்லியன் என்பதும் அந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

