கேன்டோன்மண்ட் ரோட்டில் உள்ள பின்னக்கல்@டக்ஸ்டன் புளோக்கில் இருக்கும் வீடு ஒன்றில் வியாழக்கிழமை தீ மூண்டது.
அந்த வீட்டில் உள்ள வழிபாட்டு இடத்தில் எரிந்துகொண்டிருந்த எண்ணெய் விளக்கில் இருந்து அந்தத் தீ மூண்டு இருக்கலாம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
அந்த புளோக்கின் 34வது மாடியில் இருக்கும் வீட்டில் தீ மூண்டது பற்றி தகவல் கிடைத்ததும் அன்று இரவு 8.35 மணிக்கு இந்தப் படை அங்கு விரைந்தது.
தீயணைப்பாளர்கள் அந்த வீட்டிற்குள் பரவி இருந்த தீயை அணைத்தனர். தீ மூண்டபோது வீட்டில் யாரும் இல்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
வழிபாட்டு இடத்தில் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்றுவிட்டதாக முதல்கட்ட புலன்விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
தீ மூண்டதன் காரணமாக அந்த வீட்டில் புகையும் வெப்பமும் சூழ்ந்து இருந்தது. யாருக்கும் பாதிப்பு இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்கத்து வீடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 40 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
எண்ணெய் விளக்குகளை எரிந்து கொண்டிருக்கும் நிலையில் அப்படியே எரியவிட்டுவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவற்றை அணைத்துவிட்டு வெளியே செல்லுமாறும் மக்களுக்கு தற்காப்புப் படை நினைவூட்டியது.