மார்சிலிங் லேனில் இருக்கும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் தன் மூத்த புதல்வியைத் திரும்பத் திரும்ப கத்தியால் குத்திய 65 வயது ஆடவர், புதல்வி மரணமடையவில்லை என்பது தெரிந்ததும் திரும்பி வந்து மீண்டும் குத்தினார்.
மனைவியை இழந்த ஷோ ஆ சான் என்ற அந்த மலேசிய லாரி ஓட்டுநர், கொலை செய்ய முயன்றதாகக் கூறும் குற்றத்தைச் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு நேற்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 10 முதல் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவேண்டும் என்று அரசினர் தரப்பு வாதிட்டது. 10 ஆண்டு கள் சிறைத்தண்டனை போது மானது என்று தற்காப்புத் தரப்பு கேட்டுக்கொண்டது.
அந்தத் தந்தை, திருவாட்டி ஷோ சுயட் லியான், 42, என்ற தனது மூத்த புதல்வியை மார்பு, வயிறு, முதுகு, தோள்பட்டை, கை ஆகிய இடங்களில் மொத்தம் 17 தடவை குத்தினார். சிங்கப்பூர் நிரந்தரவாசியான அந்த மாதுக்கு நுரையீரல்கள் பாதிக்கப்பட்டன.
இருந்தாலும் அவர் உயிர்பிழைத்துவிட்டார். இத்தகைய தாக்குதலுக்குக் கடும் தண்டனை தேவை என்று வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கூறினார்.
அந்த மாது ஒரு தடவை அல்ல பலமுறை தாக்கப்பட்டார். சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வழியே சென்றவர்கள் முன்னிலையில் திரும்பி வந்தும் அந்தப் பெண்ணை அந்த ஆடவர் தாக்கினார் என்பதை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். தற்காப்புத் தரப்பு வாதத்தை நீதிபதி நிராகரித்தார்.
கத்திக் குத்து சம்பவம் சென்ற ஆண்டு நிகழ்ந்தது. ஷோவுக்கு மூன்று புதல்விகள், இரண்டு புதல்வர்கள். பிள்ளைகளோடு ஷோ அவ்வளவு பாசத்தோடு இல்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாருவில் இருக்கும் ஒரு வீடு யாருக்கு சொந்தம் என்பதன் தொடர்பில் பிள்ளைகளுக்கும் அவருக்கும் பிரச்சினை இருந்ததாகக் கூறப்படுகிறது.
பிரச்சினை எழுவதைத் தடுப்பதற்காக அந்த வீட்டைப் புதுப்பித்து அதை விற்றுவிடலாம் என்று ஷோவின் பிள்ளைகள் முடிவுசெய்தனர்.
புதுப்பிக்கப்பட்ட வீட்டைப் பார்த்ததும் ஷோ மனமுடைந்துபோனார். வீடு விற்கப்பட்டுவிட்டது என்று அனுமானித்துக்கொண்டார்.
தன் மூத்த புதல்வி திருவாட்டி ஷோதான் இதற்கெல்லாம் காரணம் என்று நம்பிய தந்தை, மகளைக் கொலை செய்வது பற்றி சிந்திக்கத் தொடங்கி, சென்ற ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தன் திட்டத்தை நிறைவேற்ற முடிவுசெய்தார்.
ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை மோட்டார்சைக்கிளில் சிங்கப்பூர் வந்த அவர், திருவாட்டி ஷோ வசித்து வந்த மார்சிலிங் லேன் பகுதியில் திருவாட்டி ஷோ நடந்து சென்றபோது அவரைப் பின்தொடர்ந்து சென்று பல முறை அவரை கத்தியால் குத்தினார்.
தன் புதல்வி சாகவில்லை என்பது தெரிந்ததும் திரும்பி வந்து, 'நீ இன்னமுமா சாகவில்லை' என்று கேட்டு திருவாட்டி ஷோவை மீண்டும் குத்திவிட்டு அவர் ஓடிவிட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

