இன, சமய நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக சிங்கப்பூர் திகழ முடியும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், உலகிலேயே ஆக அதிக பன்மயச் சமூக நாடுகளில் ஒன்றாக இருக்கிறது என்பதையும் அதன் குடிமக்கள் அனைவரும் ஒரே மக்களாகத் திகழ உறுதி தெரிவித்து இருக்கிறார்கள் என்பதையும் இதன்தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான திரு மசகோஸ், முஸ்லிம் சமூகங்கள் பற்றிய மெய்நிகர் ஆய்வரங்கு ஒன்றில் உரையாற்றினார்.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் ஏற்பாடு செய்த அந்த ஆய்வரங்கில் சிங்கப்பூரர்களும் வெளிநாட்டினரும் கலந்துகொண்டனர். மதச்சார்பற்ற நாடுகளில் நிலவும் திறந்த, நவீன, பன்மயச் சமூகங்களில் பல முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினர் வாழ்கிறார்கள் என்பதை அவர் சுட்டினார்.
அத்தகைய சமூகத்தினரின் அனுபவங்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக வாழக்கூடிய சமூகங்களின் அனுபவத்தில் இருந்து திட்டவட்டமாக வேறுபட்டு இருக்கும் என்று தெரிவித்தார்.
அத்தகைய முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தினர், சிங்கப்பூர் முஸ்லிம்களைப் போலவே, தங்கள் சமயத்தைப் பின்பற்றும் அதேவேளையில், நாட்டு நிர்மாணத்திற்குத் தொண்டு செய்யும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். சிங்கப்பூர் அமைதியையும் நிலைப்பாட்டையும் அனுபவித்து வருவதற்கு வகைசெய்யும் மூன்று ஆதார தூண்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
நீதி, சமத்துவம் என்பது அந்த மூன்று தூண்களில் ஒன்று என்று குறிப்பிட்ட திரு மசகோஸ், சுயசார்பு என்பது மற்றொரு தூண் என்றார். சிங்கப்பூர் பிணைப்புமிக்க, நல்லிணக்கமிக்க சமூகமாக இருப்பது மூன்றாவது தூண் என்று அவர் வர்ணித்தார்.
சிங்கப்பூரில் பல ஆண்டுகாலமாக இன, சமய நல்லிணக்கம் நிலவி வருகிறது என்பதைச் சுட்டிய அமைச்சர், இருந்தாலும் அதைக் கிள்ளுக்கீரையாகக் கருதாமல் நல்லிணக்கத்தைப் பேணி பலப்படுத்த சமூகத்தைச் சேர்ந்த அனைத்துக் குழுவினரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.