மரினா பே சேண்ட்ஸ் அருகே இன்று திங்கட்கிழமை காலை (நவம்பர் 8) மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொண்டன. இதில் காயமடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
பேஃபிரண்ட் அவென்யூ, மரினா பொலிவார்ட் சந்திப்பில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து காலை 8.15 மணியளவில் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.
இந்த விபத்தில் இரண்டு கார்களும் ஒரு டாக்சியும் மோதிக்கொண்டன. ஒரு கார் தலைகீழாகக் கவிழ்ந்தது.
விபத்தில் காயமடைந்த 69 வயது டாக்சி ஓட்டுநருக்கும் 43 வயது கார் ஓட்டுநருக்கும் மருத்துவ உதவி தேவைப்பட்டது.
ஒருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும் மற்றொருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.

