செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சிங்கப்பூரில் சுகாதார அறிவியல் புத்தாக்கத்தை மேம்
படுத்த சிங்ஹெல்த் அமைப்பும் எஸ்ஜிஇன்னோவேட் அமைப்பும் மூன்று ஆண்டு பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்து நேற்று காலை அறிவிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டையும் அதன் மேம்பாட்டையும் அதிகரிக்க இந்தப் பங்காளித்துவம் இலக்கு கொண்டுள்ளது.
பரிசோதனை, சிகிச்சை முறை ஆகியவற்றை மேம்படுத்துவதிலும் இந்தப் பங்காளித்துவம் மும்முரம் காட்ட திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்புச் சேவையை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த முயற்சி மேள்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பில் இருதரப்பினரும் கையெழுத்திடுவதை காணொளி மூலம் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று பார்வையிட்டார்
"அரசாங்கத்துக்குச் சொந்தமான தனியார் அமைப்பான எஸ்ஜி இன்னோவேட் அறிவியல் ஆய்வுகளை தொழில்நுட்பப் பயன்பாடுகளாக மாற்றி அமைக்கிறது. சிங்கப்பூரின் ஆகப் பழைய சுகாதாரப் பராமரிப்பு நிலையமான சிங்கப்பூர் பொது மருத்துவமனையை சிங்ஹெல்த் அமைப்பு நிர்வகிக்கிறது," என்று நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் நிகழ்வில் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
சுகாதாரப் பராமரிப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து அமைச்சர் ஓங் உரையாற்றினார். சேட்போட் டாக்டர் கொவிட் எனும் செயற்கை நுண்ணறிவு உரையாடல் முறையை அவர் உதாராணம் காட்டினார். கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுடன் அவர்களது தாய்மொழியில் அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தளம் பேசுவதை அவர் சுட்டினார். இதன்மூலம் சமூகப் பராமரிப்பு நிலையங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களின் உடல், மனநலனைச் சிறப்பான முறையில் கண்காணிக்க முடிவதாக திரு ஓங் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரின் தீவிர மருத்துவ மற்றும் ஆய்வுத் திறன்கள், மருந்தியல் மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் புத்தாக்க நிபுணர்கள், எஸ்ஜிஇன்னோவேட்டின் ஆழ்ந்த தொழில்நுட்ப நிபுணத்துவமும் பலதரப்பட்ட பிரிவுகளும் சுகாதார அறிவியல் புத்தாக்கத்தின் ஆற்றல் வளத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவில் புதிய பங்காளித்துவம் கவனம் செலுத்துகிறது.
"பரிசோதனை முறைகளின் துல்லியத்தை மேம்படுத்தவும் தனிப்பட்ட முறையிலான சிகிச்சைகளின் நெறிமுறைகளை மேம்படுத்தவும் தொழிலாளர் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும் தரவுகள், பகுப்பாய்வு, அபாயங்களை முன்கூட்டியே முன்னுரைக்கும் மாதிரிகள் ஆகியவற்றில் கூடுதல் திட்டங்களை எதிர்பார்க்கிறோம்," என்று சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாகி பேராசிரியர் ஐவி இங் தெரிவித்தார்.
தற்போதைய அணுகுமுறை
யுடன் ஒப்பிடும்போது நோயாளி
களுக்கு செயற்கை நுண்ணறிவு அணுகுமுறை துல்லியமான பரிசோதனை முடிவுகளைக் காட்ட வேண்டும் என்று எஸ்ஜிஇன்னோவேட் அமைப்பின் தலைமை நிர்வாகியான டாக்டர் லிம் ஜியூ செய்தியாளர்களிடம் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு பரிசோதனை முறையின் கட்டணம் தற்போதைய பரிசோதனை முறையைப் போன்று அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
புதிய பங்காளித்துவத்தால் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக டாக்டர் லிம் கூறினார். இதற்கு முன்பு இத்தகைய உயர்நிலையில் இதுபோன்ற பங்காளித்துவம் ஏற்பட்டதில்லை என்றார் அவர். சுகாதாரப் பராமரிப்பு மற்றும் புத்தாக்கத் துறைகளில் செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவத்தை அமைப்பதில் புதிய பங்காளித்துவம் கவனம் செலுத்தும்.
சிங்ஹெல்த்தின் மருந்தியல் மற்றும் புத்தாக்க நிபுணர்களும் எஸ்ஜி இன்னோவேட் அமைப்பில் அரசாங்க, தனியார் துறைகளைச் சேர்ந்த பங்காளிகளையும் அடிக்கடி ஒன்றிணைந்து செயல்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரு அமைப்புகளும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு காலாண்டிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்னிலக்கப் புத்தாக்கம் தொடர்பான நிகழ்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது, துறை சார்ந்த பங்காளிகளுக்குத் தேவையான திறன்களைக் கற்றுத்தரும் நோக்கில் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட சுகாதாரப் பயிலரங்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

