பயணத் தடை நீக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலிலிருந்து சிங்கப்பூரை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது.
இதன் விளைவாக ஆண்டு இறுதியில் ஐரோப்பாவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த சிங்கப்பூரர்கள் ஏமாற்றம் அடையக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பிய நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. பயணத் தடை நீக்கப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலிலிருந்து சிங்கப்பூருடன் உக்ரேனையும் ஐரோப்பிய ஒன்றிய மன்றம் நேற்று நீக்கியது.
ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு இப்பட்டியல் மறுஆய்வு செய்யப்படுகிறது. கடந்த மாத இறுதியில் பட்டியல் மறுஆய்வு செய்யப்பட்டபோது சிங்கப்பூர் அதில் இடம்பெற்றிருந்தது.
"அந்தந்த நாடுகளில் உள்ள கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம், கிருமித்தொற்றுக்கு எதிராக அங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள், வழங்கப்படும் தகவல்கள், தரவுகள் ஆகியவற்றின் நம்பகத்தன்மையைக் கருத்தில் கொண்டு பட்டியலில் இடம்பெறும் நாடுகள் குறித்து முடிவெடுக்கப்படும்," என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது.
மன்றம் பரிந்துரைகளை முன்வைத்தாலும் அவற்றை நடை
முறைப்படுத்துவது உறுப்பிய நாடுகளுடைய அரசாங்கங்களின் பொறுப்பாகும்.
புதிய பரிந்துரையால் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 உறுப்பிய நாடுகளும் சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பரிந்துரையின் உடனடி தாக்கம்
இன்னும் தெரியவில்லை.