ஆண் நடனப் பயிற்றுவிப்பாளர் ஒருவர், வெவ்வேறு தொடக்கநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவர்கள் இருவருக்கு பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாக சிங்கப்பூரரான 41 வயது ஆடவர், ஐந்து பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு ஒரு சிறுவனுக்கு இரண்டு முறையும் 2019ல் இருந்து 2020ஆம் ஆண்டுவரை இன்னொரு சிறுவனுக்கு மூன்று முறையும் அந்த ஆடவர், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி, அந்த ஆடவர் இன்னொரு சிறுவனிடம் பள்ளிப் பேருந்தில் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த ஆடவர், பள்ளிகளில் இனி நடனப் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கான அனுமதியை கல்வி அமைச்சு ரத்து செய்துவிட்டது.
"மாணவர்களுக்குப் பாதுகாப்பான கற்றல் சூழ்நிலையை வழங்க கல்வி அமைச்சு கடப்பாடு கொண்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்புக்கும் உடல்நலத்திற்கும் கேடுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சு தயங்காது," என்று அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். டிசம்பர் 13ஆம் நடக்கவிருக்கும் விசாரணையில், அந்த ஆடவர், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதினான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது பிரம்படி ஆகிய தண்டனைகள் விதிக்கப்படலாம். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிகளின் பெயர்களும் குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆடவரின் பெயரும் வெளியிடப்படவில்லை.